தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்து வருகிறார்.
இடைக்கால பட்ஜெட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற முத்தான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றை போதுமான அளவில் அமைத்து கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,3771 வகுப்பறைகள் 107 ஆய்வகங்கள் 4 ஆண்கள் விடுதிகள் 4பெண்கள் விடுதிகள் 673 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2009 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல், அவற்றை அணுகத் தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத் திறன் பயிற்சியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இத்திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் 50 விதமான துறைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது 41 மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) பயின்று வருகின்றனர். 17 மாணவர்கள் ஜப்பான், தைவான், மலேசியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பயின்று முழு கல்வி உதவித்தொகையுடன் பயின்று வருகின்றனர்.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அன்புக் கரங்கள் திட்டம் மூலம் 10,637 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு
- தகவல் தொழில் நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
