இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’!

Published On:

| By uthay Padagalingam

En Swasa Kaatre reminds Isha Gopikar

சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். En Swasa Kaatre reminds Isha Gopikar

அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது.

வீணான ‘காஸ்ட்டிங்’! En Swasa Kaatre reminds Isha Gopikar

En Swasa Kaatre reminds Isha Gopikar

ஒரு அழகான நாயகன். அழகழகான நாயகி. இரண்டு பேருக்கும் காதல் மெதுவாக மலர்கிறது. அதனைச் சிதைக்க ஒரு வில்லன் வருகிறார். அவர் நாயகனுக்கு நன்கு தெரிந்தவர்.

நாயகனை ஒரு மனிதர் ‘வளர்ப்பு மகன்’ ஆகப் பாவிக்கிறார். அவரது ஒரிஜினல் மகன் தான் வில்லன். ‘உன் அப்பனை கொன்னுடுவேன்’ என்று சொல்லியே சிறு வயது முதலே தனக்குச் சாதகமாகச் சில தவறுகளைச் செய்ய வைக்கிறார். En Swasa Kaatre reminds Isha Gopikar

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. நம் நாயகன் வளர்ப்பு தந்தையின் மீது பாசம் கொண்டவராக மட்டுமல்லாமல், ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆகவும் இருக்கிறார். அவ்வாறு ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகிறது. உயிருக்கே ஆபத்து எனுமளவுக்கு நிலைமை மாறுகிறது.

அதன்பின் நாயகன் என்னவானார்? நாயகி உடனான அவரது காதல் என்னவானது? அந்த வில்லன் என்னவானார் என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.

இதில் நாயகனாக அரவிந்த் சாமி, நாயகியாக இஷா கோபிகர், வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். நாயகனை வளர்ப்புமகனாக கருதும் மனிதராக ரகுவரன் தோன்றியிருந்தார். இது போக தேவன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய் உட்படப் பலர் இதில் நடித்திருந்தனர்.

ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவரும் அக்காலகட்டத்தில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வில்லன் நடிகர்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றிய காட்சிகள் எதுவும் விசிலடித்துக் கொண்டாடும் அளவுக்கு அமையவில்லை. En Swasa Kaatre reminds Isha Gopikar

சின்னி ஜெயந்த், வடிவேலுவைக் கொண்டு நகைச்சுவை ட்ராக் ஒன்றும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. ‘கோபப்படுற மாதிரி காமெடி பண்ணக்கூடாது’ என்று சொல்கிற அளவுக்கு அவர்களது காட்சிகள் இருந்தன. En Swasa Kaatre reminds Isha Gopikar

சிறப்பானதொரு ‘காஸ்ட்டிங்’ இப்படத்தில் இருந்தும், தகுந்த காட்சியமைப்பு இல்லாததால் அவர்களது பங்களிப்பு வீணாகிப் போனது. En Swasa Kaatre reminds Isha Gopikar

ரஹ்மானின் இசை! En Swasa Kaatre reminds Isha Gopikar

En Swasa Kaatre reminds Isha Gopikar

நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு ஏற்றவாறு படத்தில் சில காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவி. இவர் தெலுங்கி ‘ஆக்ரஹம்’, தமிழில் ‘ஹானஸ்ட்ராஜ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ படங்களை இயக்கியவர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் இவரையும் வித்தியாசப்படுத்த முடியாமல், அக்காலகட்டத்தில் பத்திரிகைச் செய்திகளில் குழப்படி நடந்ததுண்டு.

’பாடல்களை எழுதிய வைரமுத்துவே, அதற்கு முன்னதாக வரும் காட்சிகளுக்கு வசனம் எழுதினாரோ’ என்று நினைக்கும் அளவுக்கு அக்காட்சிகள் அமைந்திருக்கும். அதனால் படத்திற்கு எந்தப் பயனும் இல்லை.

தூய தமிழில் வசனங்கள் அமைந்தாலும், அதனைக் கொண்டாடும்விதமான பாத்திர வார்ப்போ, காட்சிச் சூழலோ படத்தில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஐரோப்பியப் படத்தில் தமிழ் ஆடியோவைச் சேர்த்தது போலிருந்தது இப்படம் தந்த அனுபவம்.

அதே நேரத்தில், ‘தீண்டாய் மெய் தீண்டாய்’ எனும் காலத்தால் அழியாப் பாடலை இதில் தந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். காதல் இணையின் முதல் ஸ்பரிசத்தை என்றென்றைக்கும் நினைவுகூரத்தக்க பாடல் அது.

’சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாடலானது, மழையில் நனையும் ஒவ்வொரு கணமும் என் நினைவினில் வந்து போகும்.

‘என் சுவாசக் காற்றே நீயடி’ பாடல் மயிலிறகொன்று முகத்தைக் கொஞ்சுகிற அனுபவத்தைத் தரும்.

‘காதல் நயாகரா’, ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடல்களும் காதல் மழையைப் பொழியும்.

இவை போதாதென்று ‘ஜும்பலக்கா’ பாடலிலும் காதல் பாடம் எடுத்திருப்பார் கவிஞர் வைரமுத்து.

இந்தப் பாடல்களின் காட்சியாக்கம் இப்போதும் ’கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்’ தரத்தில் இருக்கும். அந்த வகையில் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட இடங்களையும் இப்படக்குழு தேடித் தேடித் தேர்ந்தெடுத்ததை உணர முடியும்.

போலவே, இப்படத்தில் கலை இயக்குனரும் ஆடை வடிவமைப்பாளரும் ஒவ்வொரு பிரேமும் ’கலர்ஃபுல்’ ஆக இருக்க வேண்டுமென்று உழைத்திருப்பார்கள்.

’தீண்டாய்’ பாடலுக்கு முன்பாக, ‘லைட் பர்பிள்’ வண்ணத்தில் சேலையணிந்து இஷா கோபிகர் வரும் காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சி மற்றும் அப்பாடலில் இஷா கோபிகர் இடம்பெற்றவற்றின் ஸ்டில்கள் பத்திரிகைகளை அந்தக் காலகட்டத்தில் அலங்கரித்தன. கூடவே, ‘மிலிட்டரி கட்’ ஹேர்ஸ்டைலில் அரவிந்த் சாமி வேறுவிதமாகத் தோற்றமளிக்கும் ஸ்டில்களும் வெளியாகின. இப்போதும் ‘என் சுவாசக் காற்றே’ பார்க்கும்போது அவற்றைச் சிலர் நினைவுகூரக்கூடும்.

தியா மிர்சா அறிமுகம்!

இந்தியில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் தியா மிர்சா. உலக அழகிப்போட்டியில் பங்கேற்றவர். இப்படத்தில் வரும் ‘ஜும்பலக்கா’ பாடலில் ராஜு சுந்தரத்தோடு, மிங்க் எனும் நடிகை ஆடியது நமக்குத் தெரியும். இதில் கூட்டத்தில் ஒருவராக நடிகை தியா மிர்சாவும் ஆடியிருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். ஆக, அவர் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ‘என் சுவாசக் காற்றே’ என்று சொல்லலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த தியா, படப்பிடிப்பு முடிந்ததும் நல்லதொரு சம்பளம் தந்ததாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில், அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ரஹ்மான் என்பதை மறந்து, ‘கீரவாணி இசையமைத்த பாடல் அது’ என்று சொல்லியிருந்தார். En Swasa Kaatre reminds Isha Gopikar

’என் சுவாசக் காற்றே’வை இன்று காணும்போது பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் படம்பிடித்துவிட்டு, பின்னர் அரவிந்த் சுவாமி, இஷா கோபிகர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டு, இறுதியாக செண்டிமெண்ட், நகைச்சுவை உள்ளிட்ட இதர காட்சிகளை ஆக்கியதாகத் தோன்றுகிறது. அக்காட்சிகளை வரிசைப்படுத்தினால், அவற்றின் உள்ளடக்கத்தில் இருக்கும் பட்ஜெட் குறைபாடு தெளிவாகத் தெரியும். படம் முழுக்க ஒரேமாதிரியான தரம் ‘மெயிண்டெய்ன்’ செய்திருக்கப்பட்டிருக்காது. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் அது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் வருமிடங்களில் ஒலிக்கும் ‘ஷெனாய்’ வாத்திய இசை மனதைப் பிறாண்டியதாகத் தோன்றியிருக்கிறது. பின்னாட்களில்தான், இப்படத்தில் ரஹ்மானுக்குப் பதிலாக ‘சபேஷ் முரளி’ பின்னணி இசை அமைத்தனர் என்பது தெரிய வந்தது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. En Swasa Kaatre reminds Isha Gopikar

அந்த அளவுக்கு அப்பாத்திரம் இயல்பில் இருந்து விலகியதாகத் தெரிந்தது. ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் தென்பட்ட டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பராக வந்தவரின் வில்லத்தனத்தைப் பார்த்தபோது, எனக்கு ‘என் சுவாசக் காற்றே’தான் நினைவுக்கு வந்தது.

மகன் – வளர்ப்பு மகன் ‘ஈகோ’ மோதல், மணிரத்னம் பட பாணியில் காதலர்கள் பேசுகிற வசனங்கள், விளம்பரப்படம் போன்று அமைந்திருந்த காட்சியாக்கம், அவற்றுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை என்று இருந்தது ‘என் சுவாசக் காற்றே’. ஆனாலும் அரவிந்த் சாமி, இஷா கோபிகர், ரகுவரன், ரஹ்மான், ஆர்தர் வில்சன், ராஜு சுந்தரம் என்று சில ஆளுமைகளுக்காகத் தன்னில் இருக்கும் பொலிவை மங்க விடாமல் தங்க வைத்திருக்கிறது இப்படம். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share