12 தொகுதிகள்… திமுகவுக்கு துரை வைகோ சொன்ன மெசேஜ்!

Published On:

| By Selvam

Durai Vaiko says mdmk cadres likes

12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகிறார்கள் என மதிமுக முதன்மை செயலாளரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று (ஜூன் 21) தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறோம். மதவாதத்தை எதிர்க்கக்கூடிய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்த நோக்கத்திற்கான அவசியம் இன்றைக்கும் இருக்கிறது. Durai Vaiko says mdmk cadres likes

அதேநேரத்தில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எல்லா நேரங்களிலும் திமுக எடுக்கும் முடிவுகளுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், அதை வைத்துக்கொண்டு கூட்டணியில் பிளவு, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்ல முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.

கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கிறார்கள் என்றால் அது அவர்களின் உரிமை. எந்த அரசியல் இயக்கமாக இருந்தாலும் அவர்கள் வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

அதேபோல தான் மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும், 12 தொகுதிகளில் நின்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு முதன்மை செயலாளராக இத்தனை தொகுதிகள் வேண்டும் என நான் சொல்வது முதிர்ச்சியானதாக இருக்காது. இதுதொடர்பாக இயக்கத்தின் தலைமை தான் முடிவெடுக்கும்.

திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. தேர்தல் காலகட்டத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் திமுக தலைமைக்கும் சீட் ஒதுக்குவதில் நெருக்கடி இருக்கும். அதேவேளையில், மதவாதத்தை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள பொதுநோக்கத்திற்கு பாதகம் வந்துவிடக்கூடாது என்பதால் ஒரு சமரசம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share