போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் நடிகர் ஶ்ரீகாந்த் அடைக்கப்பட்டார். Drug Case: Actor Srikanth
2002- ஆண்டு ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஶ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளாக ஶ்ரீகாந்த் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இந்த நிலையில் சென்னையில் அண்மையில் மதுபான பார் ஒன்றில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார், பிரசாந்த், சுனாமி சேதுபதி, தூண்டில் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரும் சிக்கினார். பிரதீப் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் சப்ளை செய்யும் ஜானிடம் நடிகர் ஶ்ரீகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினர் போதைப் பொருட்களை வாங்கியதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ஶ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஶ்ரீகாந்த், போதைப்பொருட்கள் வாங்கியது அவரது செல்போன் பணப் பரிமாற்றங்கள் மூலம் உறுதியானது.
இதனடிப்படையில் நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஶ்ரீகாந்தை ஜூலை 7-ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் ஶ்ரீகாந்த்.
இதனிடையே நடிகர் ஶ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.