போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்- இந்தியாவின் ‘இந்திரா காலத்து ஆளுமை’ என்னாச்சு?

Published On:

| By Minnambalam Desk

Donald trump declares ceasefire
Donald trump declares ceasefire

“இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்”.. இப்படி அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்குப் பின்னரே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இவை அனைத்தும் ‘மகிழ்ச்சி’க்குரிய நிகழ்வுகள் என்றாலும் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி இருப்பது மிக முக்கியமானதாகும்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைப் படுகொலை செய்த பாகிஸ்தானுக்கு பதிலடி தருவது என மத்திய அரசு முடிவெடுத்து Opertation Sindoor ராணுவ நடவடிக்கையை தொடங்கியது முதல் டொனால்ட் டிரம்ப் அறிவிப்புக்கு முன்னர் வரை அனைத்தையும் இந்தியர்கள் பெருமிதத்துடன் வரவேற்றனர்; இந்திய ராணுவத்தின் தீரமிக்க போர் நடவடிக்கைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரெழுச்சியான ஆதரவு இந்தியா முழுவதுமே பேரலையாக எழுந்தது கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளுமே மத்திய அரசுக்கு ஆதரவாக நின்றன.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. இதில் என்னதான் சர்ச்சை என்கிறீர்களா? Donald trump declares ceasefire

இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்திலோ, ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலோ அமெரிக்கா இப்படி மூக்கை நுழைத்து அறிவிப்பு வெளியிடுவது எல்லாம் இதுவரை இல்லாத ஒன்று.. இப்போது ஏன் அமெரிக்காவை மத்திய அரசு அனுமதித்தது? என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கேள்வி. Donald trump declares ceasefire

அதாவது பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிராக ‘ஆளுமையுடன்’ பதிலடி கொடுத்த இந்தியா, அமெரிக்காவின் நெருக்கடிகளால் அல்லது தலையீட்டால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொண்டு ‘போர் நிறுத்தம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது; இங்கு ‘இந்தியாவின் ஆளுமை’ என்பது கேள்விக்குறியாகவில்லையா? என்கின்றன எதிர்க்கட்சிகள்.

இதே பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த காலங்களிலும் இந்திய ராணுவம் போரிட்டுள்ளது; வென்றுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது; இந்தியா- சீனா இடையே யுத்தம் நடந்துள்ளது; இந்தியா- சீனா இடையே பல ஆண்டுகளாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அப்போது எல்லாம் எந்த ஒரு வெளிநாட்டின் தலையீடு அல்லது நெருக்கடியை ஏற்றுக் கொண்டு யுத்த நிறுத்த அறிவிப்புக்கு இந்தியா இறங்கிப் போனது இல்லையே என்கிற ஆதங்கமும் முன்வைக்கப்படுகிறது.

Donald trump declares ceasefire

இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த காலத்தில் 1971-ல் வங்கதேச விடுதலைக்கான போர் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த நிலையில்தான் இந்திரா காந்தி அம்மையார் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதேபோல, அமெரிக்காவை எப்போதும் நமக்கு மேலே உள்ள ‘சக்திவாய்ந்த நாடாக’ இந்திரா காந்தி அம்மையார் கருதியதும் இல்லை. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட காலத்தில் இந்திரா காந்தி அம்மையார் பேசிய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அதில், எந்த ஒருநாடும் இதைத்தான் செய்ய வேண்டும் என சொல்ல முடியாது; என்னுடைய நாடு, எங்களுடைய முடிவு, எங்களுடைய அண்டை நாடுகளுடனான விவகாரம்; நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்” என இந்திரா அம்மையார் பேசியிருப்பார். அதாவது, அமெரிக்காவே! உன் வேலையை நீ பார்.. என் வேலையை நான் பார்க்கிறேன் என்பதாகவே இந்திரா அம்மையாரின் அந்தப் பேச்சு இருக்கிறது.

அதேபோல 1980களின் தொடக்கத்தில் அண்டை நாடான இலங்கையின் திருகோணமலையில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க முயன்றது; அப்போது கோபம் கொண்ட இந்திரா காந்தி அம்மையார் , இலங்கையை மிக கடுமையாக எச்சரித்தார்; எங்களது அனுமதி இல்லாமல் எந்த ஒருநாட்டுக்கும் இலங்கை எந்த ஒரு அனுமதியும் தரக் கூடாது என்பது இந்திராவின் எச்சரிக்கையாக இருந்தது. அவரது மறைவுக்குப் பின்னர் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூட இந்த எச்சரிக்கையின் சாராம்சம் இடம் பெற்றிருந்தது. இத்தகைய ‘இந்திராவின் ஆளுமை’ அல்லது ‘இந்தியாவின் ஆளுமை’ இப்போது எங்கே போய்விட்டது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

Donald trump declares ceasefire

இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது தரப்பு தலையீட்டை இதுவரை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதோ அனுமதித்ததோ கிடையவே கிடையாது. ஆனால் இப்போது இயல்பாகவே மூன்றாம் தரப்பான அமெரிக்காவை ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு அனுமதித்து இருப்பது, இந்தியாவின் ஆளுமையை சீர்குலைக்கவில்லையா? என்கிறது காங்கிரஸ். இதனையடுத்தே உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, என்னதான் நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்கிறது காங்கிரஸ். அகன்ற மார்பு பெருமை பேசுவோரின் வீரப்பேச்சை இப்போது காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குகிறது.. பதில் கிடைக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share