நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.99 கோடி எடுத்துச் சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் தாம்பரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரிபவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி கிரிராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது. மூல வழக்குப்பதிவு செய்தும் அமலாக்கத் துறை இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இந்த இரண்டு பேரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.காமராஜ், சேலம் இளங்கோவன், தி.நகர் சத்யா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கிரிராஜன் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
