திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) வெளியிட்டார்.
அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
என்னென்ன அறிவிப்புகள்?
திராவிட மாடல் அரசால், கடந்த 3.1.2026 அன்று அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம்” சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஓய்வுபெறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், 50 விழுக்காடு ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக் குழுவை மாண்புமிகு நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களின் தலைமையில் அமைத்துள்ளது. இதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தியவுடன், அவற்றை மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்துவதற்கான உரிய குழு அமைக்கப்படும். இந்த ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்.
மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசுத் துறைகள், வாரியங்கள், நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், உரிய நேரத்தில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
“ஓய்வூதியதாரர்கள் காப்பீட்டுத் திட்டத்தின்”கீழ் அனைத்து அரசு வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒய்வூதியதாரர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களது ஐம்பதாவது வயதில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் இலவச முழு உடற்பரிசோதனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
