திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தனாது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, “நாளை மீண்டும் முதல்வரை சந்திக்கவுள்ளோம். என்ன தொகுதி என்று முதல்வர் சொல்வார். அதை ஏற்றுக்கொள்வோம். 234ம் எங்கள் தொகுதிகள் தான். ஆனால் 5 தொகுதிகளை விருப்ப பட்டியலாக கொடுத்திருக்கிறோம்” என்றார்.
முக்குலத்தோர் புலி படை கட்சி தலைவர் கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் விருப்பப்பட்டுதான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். அதிமுக கூட்டணியில் தான் கட்டாயப்படுத்துகிறார்கள். இரட்டை இலையுடன் தானே கூட்டணி. வாசன் அண்ணன் எதற்காக தாமரையில் நிற்கிறார். ஆனால் திமுக கூட்டணியில் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்று கூறினார்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறோம். தொகுதி என்ன என்பது நாளை இறுதியாகும்” என்றார்.
