சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போவதைப் போல மாலை அணிந்து இருமுடி கட்டி, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்துக்கு தேமுதிக தொண்டர்கள் வந்து மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்தின் 2-வது ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது. தேமுதிக இதனை ‘குருபூஜை’ என அழைக்கிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் (கேப்டன் ஆலயம்) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அதேபோல தேமுதிக தொண்டர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள், மஞ்சள் உடையுடன் மாலை அணிந்து, ‘சபரிமலை’க்கு செல்வதைப் போல இருமுடி கட்டி விஜயகாந்த் நினைவிடத்தை வலம் வந்தனர்.
பின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் முன்பாக அவர்கள் வரிசையாக மண்டியிட, தலையில் இருந்த இருமுடி பொதிகளை அவர் இறக்கி வைத்தார். பிஞ்சு குழந்தைகளையும் கூட இருமுடி கட்டி சுமக்க வைத்து அழைத்து வந்திருந்தனர். விஜயகாந்தை ‘அன்னதானபிரபு’ சாமி எனவும் பெரம்பலூர் தேமுதிக தொண்டர்கள் குறிப்பிட்டனர்.
