வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜகவில் பட்டாசு திருவிழாதான் என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Annamalai BJP Tamil Nadu Sarath Kumar
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் ஜூன் 27-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாக இருக்கிறது. இந்த பட்டியல் தமிழக பாஜகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் என 20-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு 50-க்கும் அதிகமானோர் பெயர்கள் டெல்லி தலைமையிடம் கொடுக்கப்பட்டனவாம்.
மாநில துணைத் தலைவர்கள் பதவிக்கு கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், ஏஜி சம்பத், ராம சீனிவாசன், வரதராஜன்; மாநில செயலாளர்கள் பதவிக்கு ஜிகே நாகராஜ், அமர் பிரசாத் ரெட்டி, டால்பின் ஶ்ரீதரன், எஸ்ஜி சூர்யா, மீனா தேவ், உமாரதி; மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு கேபி ராமலிங்கம், பால கணபதி, முருகானந்தம் உள்ளிட்டோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனவாம்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு லிஸ்ட்டை டெல்லிக்கு போய் நேரடியாகவே கொடுத்து விட்டும் வந்தார் என்பதை நாம் மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.
இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஜூன் 27-ந் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னரே யார் யாருக்கு பதவி என்கிற தகவல் தற்போது லீக் ஆகிவிட்டதாம்.

இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைதான் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். டெல்லியிடம் அண்ணாமலை கொடுத்த அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லையாம். டெல்லியை ரொம்பவே நம்பி இருந்த அண்ணாமலைக்கு இது மிகப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டதாம்.
அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சியையே பாஜகவில் இணைத்த சரத்குமாரின் கோரிக்கைகளை டெல்லி ஏற்றுக் கொண்டுள்ளதாம். சரத்குமார் தமக்கு கட்சியின் தேசிய பொறுப்புகளில் ஒன்றை தர வேண்டும்; தமது ஆதரவாளர்கள் 3 பேருக்கு மாநில பொறுப்பு தர வேண்டும் என கேட்டிருந்தாராம். இதன்படி தற்போது சரத்குமாருக்கு தேசிய பதவி ஒன்று உறுதியாம். அதேபோல சரத்குமார் பரிந்துரைத்தவர்களில் சுந்தர் என்பவருக்கு மாநில பொறுப்பு தரப்படுகிறதாம். இதனால் சரத்குமார் செம்ம ஹேப்பியாக இருக்கிறாராம்.
நீண்டகாலமாக காத்திருக்கும் விஜயதாரணி, வேலூர் கார்த்தியாயினி, கேபி ராமலிங்கம், கரூர் நாகராஜ் ஆகியோரது பெயர்களும் ஜூன் 27-ல் வெளியாகும் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.