வைஃபை ஆன் செய்ததும், “சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்ற சோகப் பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருக்க மெசேஜை வாட்ஸ் அப் டைப் செய்ய தொடங்கியது. AIADMK Sellur Raju
மதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றுதான் தென் மாவட்ட அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது..
தென் மாவட்ட அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவர் செல்லூர் கே.ராஜூ. 2011-ம் ஆண்டு முதல் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியை தம் வசம் வைத்துள்ளார். 2011 தேர்தலில் வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்று அதே கூட்டுறவுத் துறை அமைச்சரானார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறையாக, மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றவர் செல்லூர் ராஜூ.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக ‘முழு அளவில்’ தயாராகி இருந்த செல்லூர் ராஜூவுக்கு மதுரையில் ஜூன் 22-ந் தேதி நடைபெற்ற முருகன் மாநாடு ‘வாழ்நாளில் மறக்கவே முடியாத’ ‘சம்பவ’ நாளாகிப் போய்விட்டது.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதை இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் பெருமிதமாக பேசிவருகின்றனர்.
இந்த முருகன் மாநாடு நடைபெற்ற ஜூன் 22-ந் தேதி மதுரை அருகே துவரிமான் பகுதியில் உள்ள செல்லூர் ராஜூவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மிகப் பெரிய கொள்ளை நடந்தது. இந்த கொள்ளை விவரம் மறுநாள் காலை பண்ணை வீட்டுக்குப் போனபோதுதான் செல்லூர் ராஜூவுக்கு தெரிய வந்தது. பண்ணை வீட்டுக்குள் பெட்டிகள் உடைக்கப்பட்டு அத்தனையும் சிதறிக் கிடந்த கோலத்தைப் பார்த்து அப்படியே நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்தார் செல்லூர் ராஜூ.
ஏனெனில் இந்த பண்ணை வீட்டில்தான் 2026 தேர்தல் செலவுக்காக பெரும் பணத்தை பெட்டிகளில் வைத்திருந்தார் செல்லூர் ராஜூ. இவ்வளவு பெரும் தொகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியிலும் துயரத்திலும் யாரை தொடர்பு கொண்டு சொல்வது, உதவி கேட்பது என தவித்துப் போனார் செல்லூர் ராஜூ.

இந்த பதற்றத்துடனேயே, மதுரையைச் சேர்ந்த செல்வாக்கான அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு , “அண்ணே! அத்தனையுமே போயிருச்சுண்ணே… தேர்தல் செலவுக்கு ரூ17 கோடியை பண்ணை வீட்டுல வச்சிருந்தேன்.. அதை யாரோ ஆட்டைய போட்டுட்டு போயிட்டானுக அண்ணே! இதை எப்படி என்னான்னு புகார் கொடுப்பேன்.. என் கூட இருக்கிறவனுக, என்னை சுத்தி இருக்கனுவகதான் இந்த களவாணித்தனத்தை செஞ்சிருப்பானுக அண்ணே! கூடவே இருந்து குத்திட்டுப் போயிட்டானுகளே.. நீங்கதாண்ணே எப்படியாவது கண்டுபிடிச்சுக் கொடுக்கனும்” என கண்ணீரும் கம்பலையுமாக கதறியிருக்கிறார் செல்லூர் ராஜூ.
செல்லூர் ராஜூவின் கண்ணீர் குரலை கேட்டு பரிதாபப்பட்ட அமைச்சரும், “எதுவும் பயப்படாதீங்க அண்ணே.. நான் என்னான்னு பார்க்கிறேன்… நம்பிக்கையோடு இருங்கண்ணே” என ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்.
செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் சொன்னதுடன் நிற்காமல், உடனே எஸ்பியை லைனில் கூப்பிட்டு, “இதை பெர்சனலாக டீல் செய்யுங்க.. போன பணத்தை எப்படியாவது கண்டுபிடிச்சுடுங்க” என சொல்லி இருக்கிறார்.
ஆனால் எஸ்பியோ, “சார் எந்த புகாருமே கொடுக்காம எப்படி ஆக்சன் எடுக்கிறது?” என தயங்கியபடியே கேட்க, “பணம் போயிருச்சுன்னு அவங்க புகார் கொடுக்க வாய்ப்பில்லை.. சரி நான் பேசிப் பார்க்கிறேன்” என சொல்லி இருக்கிறார் அமைச்சர்.
இதனைத் தொடர்ந்தே செல்லூர் ராஜூவிடம், பண்ணை வீட்டை உடைத்துவிட்டதாக மேம்போக்காக ஒரு புகாரை வாங்கிக் கொண்டது போலீஸ். இதற்கு சிஎஸ்ஆர் தரப்படவில்லை; எப்ஐஆர்-ம் போடப்படவில்லை.
இதன் பிறகு தனி டீம் ஒன்றை அமைத்து ஸ்பெஷல் ஆபரேஷனை வேகமாக நடத்தி வருகிறார் எஸ்பி. இந்த தனிப்படை டீம் நடத்தி வரும் இடைவிடாத விசாரணையில், செல்லூர் ராஜூவின் பண்ணை வீட்டில் கொள்ளையடித்த குற்றவாளிகள் யார் என தெரிந்துவிட்டதாம். மதுரை வக்கீல் ஒருவர், அவருக்கு கூட்டாளியாக வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கும் ரவுடி ஆகியோர்தான் செல்லூர் ராஜூவின் பண்ணை வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அத்துடன், செல்லூர் ராஜூவின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர்தான் இந்த இருவரையுமே ஆபரேட் செய்த மெயின் குற்றவாளி என்பதையும் கண்டுபிடித்துள்ளதாம் ஸ்பெஷல் டீம்.

தற்போதைக்கு பணம் இருக்குமிடத்தையும் கூட இந்த ஸ்பெஷல் டீம் நெருங்கிவிட்டதாம். செல்லுர் ராஜூவின் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.17 கோடி பணமும் மதுரை சிட்டிக்குள்தான் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த அமைச்சருக்கு எஸ்பி தெரிவிக்க, அவரும் செல்லூர் ராஜூவை தொடர்பு கொண்டு. “அண்ணே நல்ல சேதிதான்.. ஆள் தெரிஞ்சுடுச்சு.. எப்ப வேணும்னாலும் பணம் கிடைச்சுரும்ணே’ என சொல்லி இருக்கிறார்.
செல்லூர் ராஜூ இப்போது நிம்மதி பெரு மூச்சுவிடுகிறாராம். இந்த கொள்ளையடிக்கப்பட்ட ரூ.17 கோடி பணத்தை எந்த நிமிடத்திலும் செல்லூர் ராஜூவிடம் மதுரை போலீஸ் ஒப்படைத்துவிடும் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.