திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். எனினும் அங்கிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக போராடி மீட்டனர்.
இந்த சம்பவத்தில் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி காலில் காயம் ஏற்பட்டது.

அதேபோல் சாத்தூரைச் சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.