சென்னை தேனாம்பேட்டை அருகே அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அண்ணாசாலையில் 3.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர். இந்த மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே, வரும் 17ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளன.
சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.பொ.சி. சந்திப்பு. வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு. விஜயராகவ சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.பொ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.
தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.பொ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
