‘டூன்’ இயக்குனர் டெனிஸ் வில்லெனுவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Denis Villeneuve to helm next James Bond film
உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கொண்ட ஆக்சன் த்ரில்லர் படங்களில் மிக முக்கியமானது ’ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்படங்கள். அவற்றுக்கு சிறுவர்கள் முதல் பெரியோர் வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
உண்மையில் ஜேம்ஸ் பாண்ட் என்பது 1953-ல் நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரமாகும். இயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட், எம்ஐ6 (EM6) என்ற உளவாளி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஒரு பிரித்தானிய நாட்டை சேர்ந்த உளவாளி ஆவார்.
இதுவரைக்கும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இது தவிர டிவி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளன.

கடைசியாக 2021 ஆம் ஆண்டில் வெளியான நோ டைம் டு டை’ தான் ஜேம்ஸ்பாண்ட் சீரிஸின் கடைசி திரைப்படமாகும். இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,860 கோடி வசூலை ஈட்டியது.
அப்படத்தில் கதாநாயகனாக நடித்த டேனியல் கிரெய்க் ஓய்வு பெற்றதை அடுத்து அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை தயாரிக்கும் உரிமையை முதன்முறையாக பெற்றுள்ள அமேசானின் MGM ஸ்டுடியோ, அதன் இயக்குநர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’டூன்’ பட இயக்குநரான டெனிஸ் வில்லெனுவே அடுத்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை இயக்க உள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான வில்லெனுவே, ‘சிகாரியோ,’ ‘டூன்,’ ‘டூன்: பகுதி இரண்டு,’ ‘பிளேட் ரன்னர் 2049,’ மற்றும் ‘அரைவல்’ போன்ற படங்களுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.
ஆமி ஆடம்ஸ் மற்றும் ஜெர்மி ரென்னர் நடித்த அறிவியல் புனைகதை படமான ‘அரைவல்’ படத்திற்காக 2017 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த இயக்குனராகவும், எழுத்தாளர் ஃபிராங்க் ஹெர்பர்ட்டின் மிகவும் பாராட்டப்பட்ட 1965 நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘டூன்’ படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்காகவும் 2022 ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வில்லனுவே கூறுகையில், “நான் ஒரு தீவிர பாண்ட் ரசிகன். எனக்கு, அவர் புனித பிரதேசம். பாரம்பரியத்தை மதிக்கவும், வரவிருக்கும் பல புதிய பணிகளுக்கான பாதையைத் திறக்கவும் நான் விரும்புகிறேன். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு,” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.