இலங்கை அருகே நடுக்கடலில் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விபத்தில் சிக்கியதாகவும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் காலி கடற்பரப்புக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த ஈரான் கப்பல் மீட்கப்பட்டு அதில் இருந்த 32 பேர் மீட்கப்பட்டனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கப்பலில் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியவில்லை. அந்த கப்பலில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், ”காலி கடற்பரப்பில் 30 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பலில் இருந்து உதவி கேட்பதாக தகவல் கிடைத்தது. இதனால் மனிதாபிமான அடிப்படையில் ஈரானிய கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என தெரிவித்தார்.
