முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நா.பெரியசாமி கூறியுள்ளதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சமூக விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால் தமிழர் ஆர். நல்லகண்ணு அவர்களுடைய உடல்நிலை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்தச் செய்தியை யாரும் நம்பாதீர்கள்.
தோழர் நல்லகண்ணு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 20 நாட்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் குழு தீவிரமாகக் கண்காணித்துச் சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலையில் சீரான இயக்கமும் முன்னேற்றமும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர் சிக்கலான நிலையிலிருந்து தாண்டவில்லை. அவர் இன்னும் உயிருடன் நல்ல முறையில் இருக்கிறார் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
