திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மனுதாரரை ஒரு பிடி பிடித்த நீதிபதிகள்!

Published On:

| By Minnambalam Desk

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. court strongly condemned the petitioner in the Tiruparangunram hill issue

ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது ஏற்கத்தக்கது அல்ல.அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதே போல திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தனியே பல்வேறு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில், “இரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோருவதாக சண்டையிட்டு வருவதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்”என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டை போடவில்லை என்றாலும் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல! ஏன் இது போன்று செய்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில், “வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த வழக்குகளை விசாரணை செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இவ்வாறு உள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது” என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், “வழிபாட்டுத்தலங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொல்லியல் துறை குறித்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் ” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். court strongly condemned the petitioner in the Tiruparangunram hill issue

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share