மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 24) கடிதம் எழுதியுள்ளார். Compensation for maa farmers
மாம்பழம் விலை சரிவால் சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளில் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 24) பிரதமர் மோடிக்கும், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் ”மா” சாகுபடி செய்யப்பட்டு அதில் 9.49 இலட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பழப்பயிர் சாகுபடியில் தமிழ்நாடு “மா” உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு “மா” மகசூல் அதிகரித்துள்ளதாலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்முதல் குறைவால், மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது அல்லது மரத்திலேயே பழுக்க விட்டுவிடுகின்றனர்.
மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தனியாரால் நடத்தப்படுவதாலும், தென் மாநிலங்களில் மாம்பழக்கூழ் அதிக அளவில் கிடைப்பதாலும், விவசாயிகள் நியாயமான விலையைப் பெற முடியவில்லை, அதனால் தமிழ்நாட்டிலிருந்து மாம்பழங்களை வழக்கமாக கொள்முதல் செய்யும் கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வணிகர்களும் மாம்பழங்களை கொள்முதல் செய்வதைத் தவிர்த்துள்ளனர்.
மாங்கனி விலையில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் “மா” விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தைப் போக்கிட அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது இத்தருணத்தில் மிகவும் அவசியம் என்பதால், இதில் ஒன்றிய அரசு தலையிட்டு, ஒன்றிய அரசின் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தில் (Market Intervention Scheme) தற்போது உள்ள மாங்கனி விற்பனை விலைக்கும் சந்தைத் தலையீட்டு விலைக்கும் (MIP) உள்ள வித்தியாசத்தை நேரடியாக விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

அதோடு, மாம்பழச் சாற்றில் உள்ள பழக் கூழின் உள்ளடக்கம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், குறைந்தபட்ச அளவு மாம்பழக் கூழ் இருக்க வேண்டும் என்பதை மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எனவே, பானங்களில் பழக் கூழைக் கலப்பதில் மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் FSSAI தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய பொருத்தமான வழிமுறைகளை வெளியிட வேண்டும்.
இரண்டாவதாக, மாம்பழக்கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக உள்ளதால் நிறுவனங்கள் அதிக அளவில் மாம்பழக்கூழ் தயாரித்திட ஆர்வமில்லாமல் உள்ளனர். எனவே, மாம்பழக் கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் ,
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். Compensation for maa farmers