கோவையில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆடுகளை கோவை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் சாலை விபத்து ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. சில இடங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் வளர்ப்பு விலங்குகள், கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோவை சாய்பாபா காலனி, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலப்பர் வீதியில் நாகராஜ் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் ஆடுகள் வாகனங்கள் செல்லும் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாக விலங்குகள் நல ஆர்வலரான பாலகிருஷ்ணன் என்பவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாகராஜூக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதை நாகராஜ் கண்டு கொள்ளாத நிலையில் நேற்று (செப்டம்பர் 15) அவரது ஆடுகள் சாலையில் சுற்றி திரிந்தன. அதில் ஒரு ஆட்டை அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தது. இதனையடுத்து பாலகிருஷ்ணன், உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணனுடன் சென்று அங்கு இருந்த 8 ஆடுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளரான நாகராஜ் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
மேலும் இதுபோன்று சுற்றி திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் பணி இன்றும் தொடர்ந்து வருகிறது.