தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை (செப்டம்பர் 11) காலமானார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வேதமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார்.
சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேதமூர்த்தியின் இறுதி சடங்குகள் நாளை (செப்டம்பர் 12) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி
சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: எனது மருமகன் சபரீசன் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
