தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களை காப்போம் என தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கும் நாளை 4 மாவட்டங்களுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 21) முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அதிகளவு மழை பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
