“தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று காவல்துறை செயல்படுகிறது” என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. chennai high court condemns tamilnadu police
பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்திரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று (ஜூலை 3) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நேரில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி வேல்முருகன் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை? என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மாஜிஸ்திரேட், இது தொடர்பாக காவல்துறைக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதை காவல்துறை திருப்பி அனுப்பி விட்டது என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி வேல்முருகன் உங்கள் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தையாக்குவதாக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் வாக்குமூலம் பதிவு செய்ய வரும் பாதிக்கப்பட்டவர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள் குற்றவாளிகளை கூட இவ்வளவு துன்புறுத்தியதில்லை.
குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவட்டாக செயல்படுகின்றனர்.
நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?.
அரசும் காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிர்ஷ்டம். இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்.
வாக்குமூலம் பதிவுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை சைதாபேட்டை மாஜிஸ்திரேட் மூன் ஆஜர்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார். chennai high court condemns tamilnadu police