செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று (அக்டோபர் 21) மாலை 4 மணி முதல் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் (3.645 டி.எம்.சி நீர்) கன அடியாகும்.
ஏரிக்கு இன்று காலையில் வினாடிக்கு வெறும் 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.20 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இப்போது ஏரிக்கு வினாடிக்கு 1000 கன அடி வரை தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்து விட காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
இதனால் செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கிறது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
