தமிழகத்தில் வரும் 28ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகர வாய்ப்புகள் உள்ளது.
வரும் 25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது. இது மேற்கு வட மேற்கு பகுதியில் நகர்ந்து 26ம் தேதி தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்ததில் இன்று (செப்டம்பர் 22) ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (செப்டம்பர் 23)ல் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் செப்டம்பர் 24 முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.” என கூறப்பட்டுள்ளது.