மாதம் ரூ.1000 உதவித்தொகை… 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் ‘ஜாக்பாட்’ திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

Central government scholarship for government school students

“படிக்க ஆசை இருக்கு, ஆனால் குடும்ப வறுமை தடையா இருக்கே…” என்று கவலைப்படும் ஏழை மாணவர்களுக்குக் கரம் கொடுக்கக் காத்திருக்கிறது மத்திய அரசு. படிப்பில் சுட்டியாக இருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்புதவித் தொகை (NMMS – National Means-cum-Merit Scholarship) திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8ஆம் வகுப்பு படிக்கும் போதே இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றுவிட்டால், 12ஆம் வகுப்பு வரை படிப்புச் செலவைப் பற்றிய கவலையே வேண்டாம். அந்தளவுக்கு மாணவர்களுக்குப் பணமழை பொழியப் போகிறது.

ADVERTISEMENT

எவ்வளவு பணம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம், ஒரு வருடத்திற்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும். நான்கு வருடங்களுக்குச் சேர்த்து மொத்தம் ரூ.48,000 மாணவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கச் சில முக்கியத் தகுதிகள் உள்ளன:

ADVERTISEMENT
  • வகுப்பு: நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
  • வருமானம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • மதிப்பெண்: 7ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் (எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50%) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை எப்படி?

மாணவர்கள் இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

  • தாள் 1 (MAT): மனத்திறன் தேர்வு (Mental Ability Test) – 90 கேள்விகள்.
  • தாள் 2 (SAT): படிப்பறிவுத் திறன் தேர்வு (Scholastic Aptitude Test) – 90 கேள்விகள் (அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடங்களிலிருந்து).

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் தாங்களாகவே நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

  • முதலில் பள்ளித் தலைமை ஆசிரியரை அணுகி, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
  • தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
  • வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் நகல்களை இணைப்பது அவசியம்.

முக்கிய தேதிகள்:

தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி தேதி விரைவில் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாகப் பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்வது நல்லது.

வருங்காலத்தில் ஐஏஎஸ், டாக்டர் கனவோடு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் ஒரு வரப்பிரசாதம். பெற்றோர்களே, உங்கள் பிள்ளை 8ஆம் வகுப்பு படிக்கிறதா? உடனே இந்தத் தேர்வுக்கு அப்ளை பண்ணச் சொல்லுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share