கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய மூத்த நீதிபதிகள் கொண்ட உள்ளக விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. cash Found at Justice Varma’Home
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியின் போது, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக எரிந்த நிலையில் 500 ரூபாய் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உள்ளக விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழுவில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
55 சாட்சிகளிடம் விசாரித்து சமர்ப்பிக்கப்பட்ட 60 பக்க அறிக்கை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டது. அதன்படி முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.
இந்தநிலையில் இந்த அறிக்கை, சட்ட வலைத்தளமான ‘தி லீஃப்லெட்’ மூலம் பொதுவெளியில் தற்போது பகிரப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “30 துக்ளக் கிரசென்ட் வளாகத்திற்குள் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது உண்மைதான். அந்த ஸ்டோர் ரூமை நீதிபதி வர்மாவும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த ரூமை, வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி அணுக முடியாதபடி வைத்திருந்தனர்.
சாட்சி ஒருவர் கூறுகையில், அந்த ரூமுக்குள் நுழைந்ததும் எனது முன்னாலும் வலதுபுறமும் 500 ரூபாய் கட்டுகள் கிடந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். இவ்வளவு பணத்தை நேரில் பார்த்தது இதுவே முதல்முறை என்று தெரிவித்திருக்கிறார்.
கண்டெடுக்கப்பட்ட பணம் சிறிய தொகை அல்ல… அந்த பணம் நீதிபதி வர்மா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் அங்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
அங்கு பணத்தை பார்த்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நீதிபதியின் மகள் தியாவும், அவருடைய தனிச் செயலாளர் ராஜீந்தர் கார்க்கியும் தீயணைப்பு வீரர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அனைத்தையும் வைத்து பார்த்தால் நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன.
சதித்திட்டத்துக்கு இலக்காகி இருப்பதாக கூறும் நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. நீதிபதி வர்மாவின் நம்பகமான ஊழியர்களால் எரிந்த பணம் மார்ச் 15 அதிகாலையில் சேமிப்பு அறையிலிருந்து அகற்றப்பட்டது என்பதை வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா உள்ளார். ஆனால் அவருக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை.
அடுத்த மாதம் கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. cash Found at Justice Varma Home