நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்து வந்தனர். இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி கடந்த 2015 முதல் 2023 வரை சுமார் ரூ.60.48 கோடி வரை பணம் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்தாவும் தங்கள் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அதிக வட்டியை தவிர்க்கும் விதமாக முதலீடு என்று மாற்றி பதிவு செய்து தரும் படி கேட்டுகொண்டதாக தீபக் கோத்தாரி குற்றம் சாட்டி உள்ளார். அதேசமயம் பணம் சரியாக திரும்ப செலுத்தப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ரூ.31.95 கோடி செலுத்தப்பட்ட நிலையில் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ.28.54 கோடி கொடுத்துள்ளார். ஆனால் ஷில்பா ஷெட்டி கடந்த 2016ம் ஆண்டு தனிப்பட்ட காரணங்கள் என கூறி இயக்குநர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
அதன் பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற கோத்தாரி குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் தீபக் கோத்தாரி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த செய்தி தற்போது பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.