பாஜக பெண் நிர்வாகி கொலை… திட்டம் தீட்டிய கணவர்: பகீர் தகவல்!

Published On:

| By Kavi

BJP woman executive murder

தஞ்சாவூரில் பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டது அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP woman executive murder

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உதயசூரியபுரத்தில் சமீபகாலமாக வசித்து வந்தவர் சரண்யா. வயது 35. இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்துடன் திருமணம் நடந்தது. 

இந்த சண்முகசுந்தரம்- சரண்யா தம்பதியினருக்கு சாமுவேல்(15), சரவணன்(13) என இரண்டு மகன்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார்.  

அதன்பிறகு அதே பகுதியைச் சேர்ந்த பாலனை 2022ல் சரண்யா மறுமணம் செய்துகொண்டார். பாலனை திருமணம் செய்வதற்கு முன்பு வரை மதுரையில் வசித்து வந்தார்.  இந்த பாலனும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது முதல் மனைவி பெயர் ராஜி. 

பாலன் – ராஜி தம்பதியினருக்கு கபிலன், சுப்ரியா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சுப்ரியா பி.டெக் படித்து வருகிறார்.

பாலன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் அவரது முதல் மனைவியும் பிள்ளைகளும் தனியாக வசித்து வருகின்றனர். 

அதேசமயம் சரண்யா, பாலன், சாமுவேல், சரவணன் ஆகிய நான்கு பேரும் குடும்பமாக உதய சூரியபுரத்தில் வசித்து வந்தனர். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கொடுங்குளம் என்ற பகுதியில் ட்ராவல்ஸ்  மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.  இந்த கடையில் அதேபகுதியைச் சேர்ந்த துர்கா வேலை செய்து வருகிறார். 

சரண்யா மதுரை மத்திய தொகுதியில் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர். 

இந்தசூழலில் பாலனுக்கும் சரண்யாவுக்கும் இடையே பொருளாதார ரீதியாக சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அதாவது முதல் மனைவியின் மகளான சுப்ரியாவுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு, பாலன் தனது இரண்டாவது மனைவியுடன் நடத்தி வரும் கடையில் இருந்து பணம் எடுத்திருக்கிறார். 

இதனால் சரண்யாவுக்கும் பாலனுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே, “உன் பசங்க, என் பசங்க” என்று பிரச்சினை வெடித்துள்ளது. இந்த சூழலில் தான் சரண்யா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

திட்டம் தீட்டி கொன்ற கணவர் BJP woman executive murder

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“சமீபத்தில் சரண்யா 43 சென்ட் நிலத்தை தன் பிள்ளைகள் பெயரில் வாங்க முயன்றிருக்கிறார். அப்போது பாலன், என்னுடைய முதல் மனைவி மகன் கபிலன் பெயரில் எழுத வேண்டும் என்று பிரச்சினை செய்துள்ளார். ஆனால் சரண்யா இதற்கு மறுத்துள்ளார்.

இந்த சூழலில் பாலனும், அவரது மகன் கபிலனும் சேர்ந்து சரண்யாவை கொல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாக திட்டமிட்டனர். 

ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வந்த துர்காவின் கணவர் பார்த்திபனிடம்  பாலனும், கபிலனும் சரண்யாவை கொலை செய்வது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். இந்த தகவல் துர்காவுக்கும் தெரியவந்துள்ளது. 

இந்த ஜெராக்ஸ் கடை அருகில் தான் துர்கா வீடு அமைந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் கபிலன் துர்கா வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார். 

தொடர்ந்து இவர்கள் 15செமீ அளவு கொண்ட கூர்மையான ஒரு கத்தியை வாங்கி வைத்துக்கொண்டு சரண்யாவை கொலை செய்ய முயற்சித்து வந்தனர். 

நேற்றிரவு 9 மணியளவில் கடையை மூடிவிட்டு, அருகில் உள்ள கடையில் பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு, தனது வீட்டுக்கு தனியாக நடந்து சென்றார் சரண்யா. 

வீட்டின் அருகே சென்றபோது கபிலன் உள்ளிட்ட மூன்று பேர் சரண்யாவை, அருகில் இருக்கும் மண் பாதை கொண்ட சந்து பகுதிக்கு இழுத்துச் சென்றனர். சரண்யா அலறியதால் முதலில் வாயை கிழித்திருக்கின்றனர். இதையடுத்து கழுத்தை அறுத்துவிட்டு தப்பிவிட்டனர். 

அப்போது சரண்யா துடிதுடிக்கும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களுடன் சோழா மோப்ப நாய் குழுவும்  சென்றது. 

சம்பவ இடத்தில் சரண்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருக்கு அருகில்  கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் ரத்த கறையுடன் கிடந்தது.  அந்த கத்தியில் கெமிக்கல் தடவி சோழா மோப்ப நாயை முகர செய்தனர். 

இதையடுத்து அந்த நாய் இரவு சுமார் 12 மணியளவில்  துர்கா வீட்டுக்கு சென்றது. அங்கிருந்த துர்காவிடம் போலீசார் விசாரணை செய்தனர். உங்கள் வீட்டுக்காரர் எங்கே என்று போலீசார் கேட்டபோது, அவர் வெளியே போயிருக்கிறார். எங்கே போயிருக்கிறார் என தெரியவில்லை என்று  பதிலளித்திருக்கிறார். 

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் ’கால் தம்’ போட்டு பார்த்தனர். அப்போது, கபிலன் போன் சம்பவம் நடந்த இடத்தில் ஆக்டிவாக இருந்ததும், அதன்பின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதும்  கண்டுபிடிக்கப்பட்டது. 

தொடர்ந்து சரண்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பாலன், துர்காவின் கணவர் பார்த்திபன் ஆகியோரும் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. 

இந்தநிலையில் போலீசாரின் சந்தேகத்துக்கு உள்ளான கபிலன் அவனது கூட்டாளியான குகன் மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று பேர் இன்று காலை மதுரை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் சரண்டைந்தனர். 

ஆனால் அவர்கள் சரண்டரை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொள்ளாமல்,  குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அருகில் உள்ள அண்ணா நகர் காவல் நிலைய போலீசாரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். அண்ணா நகர் போலீசார் தஞ்சாவூர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்து வந்த தனிப்படை போலீசார் மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலனையும் போலீசார் தேடி வருகின்றனர். கபிலனிடம் நடத்தப்படும் விசாரணையில்  இவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவரும்” என்று கூறுகின்றனர். 

BJP woman executive murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share