2026-ல் தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி- மதுரையில் அமித்ஷா திட்டவட்டம்- அதிமுக அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Desk

Madurai Amit Shah

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். BJP-AIADMK Alliance Will Rule Tamil Nadu in 2026, Declares Amit Shah in Madurai

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று ஜூன் 8-ந் தேதி நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்த மண்ணின் சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை தலைவணங்கி என் உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கும் போது பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லை என வருந்துகிறேன்.

3,000 ஆண்டுகால வரலாற்று பெருமை கொண்ட புனிதமான இடம் மதுரை. இந்த மண்ணின் நாயகராக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்.

ஜூன் 22-ந் தேதி முருகனுக்கான பக்தர்கள் மாநாடு இந்த மண்ணில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அனைவரும் சிறப்பாக நடத்தித் தர வேண்டும்.

மதுரை மண் பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். இன்றைக்கு நடைபெறும் இந்த கூட்டமும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும். 2026-ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்று, அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.

நாட்டின் எந்த பகுதியில் நான் இருந்தாலும் என் சிந்தனை இந்த தமிழ்நாட்டின் மீதுதான் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வர் சொல்கிறார், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்கிறார்.. நான் அல்ல.. இந்த தமிழ்நாட்டின் மக்கள்தான் உங்களை தோற்கடிக்க செய்வார்கள்..அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.

என் நீண்டகால அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன்..மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்தவனாக சொல்கிறேன்..வரும் தேர்தலில் மக்கள், திமுகவை தூக்கி எறியப் போகிறார்கள்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மிகப் பெரும் ஆதரவும் எழுச்சியும் தமிழகத்தில் இருந்து கிடைத்ததை நினைத்து பார்க்கிறேன். பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை நீங்கள் எந்த மதம் என கேட்டு கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக, நமது பிரதமர் மோடி அவர்களது நாட்டுக்குள் நுழைந்தே தாக்குதல் நடத்தினார்; அதுதான் நாம் அவர்களுக்கு புகட்டிய பாடம்.

திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றத்தால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது; மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. 100-க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசாக மாறிவிட்டது திமுக அரசு. தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பட்டியலில் 10% கூட நிறைவேற்றவிலை; ஆனால் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் பேசுகிறது திமுக.

திமுகவினருக்கு தைரியம் இருந்தால் உங்கள் தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியலை கொண்டு வந்து நிறைவேற்றிய வாக்குறுதிகளின் விவரங்களை சொல்லுங்கள். ஊழலால் மட்டுமல்ல கள்ளச்சாராயத்தாலும் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தென் தமிழ்நாட்டில் ஜாதி, பிரிவினைவாதத்தை மையமாக வைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துவிட்டன. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் முதல்வருக்கு இதுபற்றி எந்த கவலையுமே இல்லை.

1000 ஆண்டுகால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று சொல்லும் துணிச்சலை பெற்றுள்ளது திமுக அரசு.

2026-ம் ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு தேர்தல்களில் பாஜக கூட்டணி வென்று ஆட்சியை அமைக்கும். டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியை பிடித்தது போல தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அதிமுக அதிர்ச்சி- ஏன்?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த போது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறியிருந்தார் அமித்ஷா. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இந்த பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share