டிஎன்ஏ: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

atharva dna movie review minnambalam

அதர்வாவுக்கு இது வெற்றிப்படமா?

’டைட்டிலே வித்தியாசமா இருக்கே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது ‘டிஎன்ஏ’ திரைப்படம். மருத்துவமனையில் நிகழ்ந்து வருகிற பச்சிளம் குழந்தைகள் கடத்தலை இப்படம் பேசுவதாகக் காட்டியது இதன் ட்ரெய்லர்.

இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஏற்கனவே ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களைத் தந்திருக்கிறார் என்ற தகவல், படத்தில் சமூக அக்கறையும் பன்முகப் பார்வையும் நிறைந்திருக்கும் என்ற உத்தரவாதத்தைத் தந்தது. atharva dna movie review minnambalam

நீண்ட நாட்களாக வெற்றிக்காகக் காத்திருக்கும் நாயகன் அதர்வா மற்றும் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் கவனம் ஈர்த்த நாயகி நிமிஷா சஜயன் இருவரும் இதில் இருக்கின்றனர் என்பது ‘டிஎன்ஏ’ மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்காக்கியது. அந்த எதிர்பார்ப்பிற்கேற்ப அமைந்திருக்கிறதா இப்படம்?

உண்மையா? பிரமையா?

காதல் தோல்வியால் எந்நேரமும் மது போதையில் மூழ்கியிருக்கிற ஒரு இளைஞன். அவரைத் திருத்த முயன்று குடும்பத்தினரும் நண்பர்களும் தோல்விகளையே சந்திக்கின்றனர். ஒருகட்டத்தில் தன்னைச் சிதைப்பதற்கான அக்காரணத்தையே அவர் இழந்து நிற்கிறார். அந்த தருணம் அவரது வாழ்க்கை தடம்புரட்டுகிறது.

மது போதையில் இருந்து மீள்கிற சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு, அவர் புது மனிதனாக மாறுகிறார்.

இன்னொரு புறம், இயல்புக்குக் குறைவான மனவளர்ச்சியோடு இருக்கிறார் ஒரு இளம்பெண். அவரது பேச்சு, நடவடிக்கைகளால் திருமண ஏற்பாடுகள் குலைகின்றன. அது, அவரது பெற்றோரைச் சோகத்தில் தள்ளுகிறது. அப்பெண்ணின் மன பாதிப்பை இன்னும் அதிகமாக்குகிற சூழல் கெட்டிப்படுகிறது.

அந்த நேரத்தில், மேற்சொன்ன இளைஞனின் குடும்பத்தார் அப்பெண்ணைப் பார்க்க வருகின்றனர். இருவருக்கும் திருமணம் முடிவாகிறது.

திருமண மேடையில் அந்த இளைஞனின் நண்பர்களுக்கு விஷயம் தெரிய வருகிறது. அவர்கள் அவரது தந்தையிடம் சண்டையிடுகின்றனர்.

ஆனால், அந்த இளைஞர் ‘எனக்கு இவர்தான் வாழ்க்கைத் துணைவி’ என்று கலங்கிய கண்களோடு நிற்கும் அப்பெண்ணைக் கைகாட்டுகிறார். அந்த தருணம், அவர்களை இணைபிரியா தம்பதி ஆக்குகிறது.

அப்பெண் கர்ப்பம் அடைகிறார். ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் காட்டிய சில நிமிடங்களில், அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் குழந்தையைக் காட்டுகின்றனர் செவிலியர்கள்.

சில மணி நேரம் கழித்து, பால் புகட்டுவதற்காகக் குழந்தை அப்பெண்ணிடம் தரப்படுகிறது. அதனைக் கண்டதும், அவர் ‘யார் குழந்தை இது’ என்கிறார்.

ஏற்கனவே குறைபாடு இருப்பதால், ‘நம் வீட்டுப் பெண் தான் ஏதோ பிதற்றுகிறார்’ என்று குடும்பத்தினர் கருதுகின்றனர். அந்த இளைஞன் மட்டும் அப்பெண்ணின் பேச்சில் உண்மை இருப்பதாக நம்புகிறார்.

ஆனால், அந்த மருத்துவமனை தரப்போ ‘இந்த குழந்தை உங்களுடையதுதான்’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறது. இப்படியொரு சூழலில், அவர் தனது மனைவி பக்கம் நிற்பாரா அல்லது அவரது பேச்சைப் புறந்தள்ளுவாரா?

இந்த கேள்விக்கு, மனைவி சொல்வதை முழுவதுமாக அவர் நம்புவதாகச் சொல்கிறது ‘டிஎன்ஏ’. உண்மையில் குழந்தை காணாமல் போனதா? அப்படியானால், இப்போதிருக்கும் குழந்தை எப்படி வந்தது? இந்த கேள்விகளுக்குப் பரபரப்பான காட்சிகள் வழியே பதில் சொல்கிறது.

குழந்தை காணாமல் போவதாகத் தாய் சொல்வது உண்மையா அல்லது பிரமையா என்ற எண்ணத்தை முன்வைத்து, திரைக்கதையில் சில ‘க்ளிஷே’வான காட்சிகளை புகுத்தியிருக்கலாம்.

ஆனால், அந்த கணவனின் நம்பிக்கை அப்பெண்ணின் மீது பூரணமாக இருக்கிறது என்று காட்ட, அதனை அறவே தவிர்த்திருக்கிறார் இயக்குனர். வெல்டன்!

வித்தியாசமான ‘காஸ்ட்டிங்’!

திரைக்கதையின் பெரும்பகுதி தன்னைச் சார்ந்திருப்பதை உணர்ந்து சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் அதர்வா. அவரது நடிப்பு வாழ்வில் இது முக்கியமான படமாக மாறியிருக்கிறது. அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, நிச்சயம் இது வெற்றிப்படமே.

நிமிஷா சஜயனுக்குப் பெயர் சொல்லும் பாத்திரம். ‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்லிவிடக் கூடிய சாத்தியங்களைத் துவம்சம் செய்திருக்கிறது அவரது பங்களிப்பு.

பாலாஜி சக்திவேல் இதில் எஸ்.ஐ. ஆக வருகிறார். இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகளில் அதர்வா உடன் அவர் தோன்றுகிறார்.

இன்னும் சேத்தன், விஜி சந்திரசேகர், பசங்க சிவகுமார், சுப்பிரமணிய சிவா, ரமேஷ் திலக், முகம்மது ஜீஷன் அயூப், ஆதிரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் உண்டு.

இவர்கள் அனைவருமே ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். சிறப்பான காஸ்ட்டிங்’ என்று சொல்லும்படியாகப் பாத்திரத்தோடு பொருந்தி நின்று, நன்றாகவே நடித்திருக்கின்றனர்.

ஆனாலும், இவர்களது பங்களிப்பு ஒருகட்டத்தோடு நின்றுவிடுவதாக உள்ளது திரைக்கதை. அது நிச்சயம் சரி செய்திருக்கப்பட வேண்டும். அதனை ஈடுகட்டும்விதமாக நாயகன், நாயகியின் குடும்பத்தினர் தனியாக சில காட்சிகளில் காட்டப்பட்டிருக்கின்றனர்.

கருணாகரன் ஒரு காட்சியில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கிறார். படத்தில் முக்கியமான பாத்திரங்களில் இடம்பெற்ற ரித்விகா, போஸ் வெங்கட் போன்றோருக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது ஒரு குறையே.

இதில் வரும் வில்லன் பாத்திரங்களும் சரிவரத் திரையில் காட்டப்படவில்லை. இந்த குறைகளைத் தெரிந்தே இயக்குனர் அனுமதித்திருப்பதாகப் படுகிறது. காரணம், திரைக்கதையில் ஹீரோயிசத்திற்கு அவர் கொடுத்திருக்கிற முதன்மையான இடம். அதிஷா வினோ உடன் இணைந்து எழுத்தாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்.

விசாரணைக்காகச் செல்லும் இடங்கள் மட்டுமல்லாமல் குற்ற ஆவணக் காப்பகத்திற்கும் பாதிக்கப்பட்டவரை ஒரு சப் இன்ஸ்பெக்டர் உடன் அழைத்துச் செல்வது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

அந்த காட்சிகள் அதுவரையிலான ‘யதார்த்தம்’ நிறைந்த திரைக்கதை ட்ரீட்மெண்டை ‘பணால்’ ஆக்குகின்றன.

அந்த குறையைச் சரி செய்ய, ஒரு கான்ஸ்டபிள் பாத்திரத்தை உருவாக்க வேண்டும். அதனை நாயகன் அல்லது நாயகியோடு தொடர்புபடுத்த வேண்டும். அந்த ‘வேண்டும்’களை தவிர்க்கவே இயக்குனர் அப்படியொரு முடிவெடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல், காணாமல் போன குழந்தை என்னவானது என்ற கேள்வியை மட்டுமே கதை சுற்றி வருவது படத்திலுள்ள ‘லாஜிக் மீறல்களை’ப் புறந்தள்ளச் செய்கிறது.

நாயகன் அதர்வா மற்றும் பாலாஜி சக்திவேல் உடன் நாமும் அலைந்து திரிகிற உணர்வை ஏற்படுத்துகிறது காட்சியாக்கம். அதுவே இப்படத்தின் சிறப்புகளில் தலையாயது.

ஒளிப்பதிவாளர் பார்த்திபன், கலை இயக்குனர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், பின்னணி இசை தந்த ஜிப்ரான் வைபோதா மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீகாந்த் ஹரிகரன், சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சாய்வி, சஹி சிவா இசையமைத்துள்ள பாடல்கள் ‘ஓகே’ ரகத்தில் இருக்கின்றன.

குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பான யதார்த்தத்தை, அதன் பின்னிருக்கும் அதிர்ச்சிகளை முழுமையாக இப்படம் பேசவில்லை. அதேநேரத்தில் குழந்தை பாசத்தில் மூழ்கியிருக்கிற ஒரு சாதாரண தாய், தகப்பனின் வலியையும் வேதனைகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்திய வகையில் கவர்கிறது ‘டிஎன்ஏ’.

என்ன, மேற்சொன்ன குறைகளைக் களைந்திருந்தால் இன்னும் சிறப்பான இடத்தை இப்படம் பெற்றிருக்கும். அந்த நிலையை அடையாதது வருத்தம் தான்.

ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான உள்ளடக்கத்தோடு இந்தக் கதையைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். அவரது முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிட்டியிருப்பதாகவே தெரிகிறது. atharva dna movie review minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share