அபயந்தர குட்டவாளி : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Asif Ali's Abhyanthara Kuttavali movie review June 6

பெண்களை இழிவாகச் சித்தரிக்கிறதா?

மலையாளத்தில் தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்று பெரும்பாலான நட்சத்திரங்கள் மெனக்கெடுகின்றனர். ஆனால் மம்முட்டி, குஞ்சாக்கோ போபன் என்று சமீபகாலமாக அதனை வெற்றிகரமாகக் கையாள்பவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் இடம்பிடித்திருப்பவர் நாயகன் ஆசிஃப் அலி. Asif Ali’s Abhyanthara Kuttavali movie review June 6

கடந்த ஆண்டு தலவன், லெவல் கிராஸ், அடியோஸ் அமிகோ, கிஷ்கிந்தா காண்டம் என்று ஆச்சர்யம் தந்தவர், இந்த ஆண்டு ரேகாசித்ரம், சர்கீத் படங்களைத் தொடர்ந்து ‘அபயந்தர குட்டவாளி’யில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் அமைந்தவை என்பதே ஆசிஃபை நாம் ஆச்சர்யத்தோடு உற்றுநோக்கக் காரணமாக உள்ளது.

சேதுநாத் பத்மகுமார் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் துளசி, ஸ்ரேயா ருக்மிணி, ஜகதீஷ், ஹரிஸ்ரீ அசோகன், ஆனந்த் மன்மதன், அஸீஸ் நெடுமங்காடு, சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்? Asif Ali’s Abhyanthara Kuttavali movie review June 6

நீதிமன்றத்தில் நிராதரவாக..! Asif Ali’s Abhyanthara Kuttavali movie review June 6

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். பல கனவுகளோடு திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார். பெண் பார்க்கும் படலம் முடிந்து, அனைவரது சம்மதத்தோடு இல்லறத்தில் புகுகிறார்.

முதலிரவு அன்று அவரது அறையில் ஆணுறை பாக்கெட்டுகள் ஆறேழு இருப்பதைக் கண்டு அதிர்கிறார் மணமகள். தயிர் வாங்கி வரச் சொன்னதற்குப் பதிலாக அதனை வாங்கி வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மணமகன் நண்பர்கள்.

அன்று மட்டுமில்லை, பத்து நாட்கள் ஆகியும் மணமகள் அருகே மணமகனால் நெருங்க முடிவதில்லை. ஆனால், அந்த மணமகன் பொறுமை காக்கிறார்.

ஆனாலும் வீட்டார், நண்பர்களின் பேச்சு ஒருகட்டத்தில் அவரைக் கடுப்பேற்றுகிறது. ஒருநாள் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார்.

அன்றைய தினம், பெண் கொடுத்த மாமனார் சொன்னார் என்ற காரணத்திற்காக ஒரு ஏலக்காய் தோட்டத்தைப் விலை பேசச் செல்கிறார். அதனைக் கண்டதும், அவருக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ’இதுக்கா இவ்ளோ பில்டப் கொடுத்தாரு’ என்று புரோக்கரிடம் சொல்லிவிட்டு வருகிறார்.

வீடு திரும்பினால், தனது தோழியுடன் சேர்ந்து நெதர்லாந்துக்கு உயர் படிப்பு கற்கச் செல்கிறேன் என்கிறார் மனைவி. ‘அவ்ளோ பணம் என்கிட்ட இல்ல’ என மணமகன் சொல்ல, ‘என்னோட நகைகளை அடகு வச்சுக்கலாம்’ என்கிறார்.

’என்னால நகைய கொடுக்க முடியாது. இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சொல்லலையே’ என்று மணமகன் சொல்ல, உடனே அங்கிருக்கும் கண்ணாடியில் தலையை முட்டுகிறார் மணமகள். அவ்வளவுதான். அவருக்குத் தலையில் காயம் ஏற்படுகிறது.

அடுத்த நாளே தந்தையை வரவழைத்து, அவருடன் சென்றுவிடுகிறார் அந்த பெண்.

பிறகு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல்நிலையத்தில் புகார் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த மணமகனுக்கு வக்கீல் ‘நோட்டீஸ்’ வருகிறது.

சாதாரணமான பின்னணி கொண்ட அந்த நபர், அந்தச் சூழலில் என்ன செய்தார்? அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்று சொல்கிறது ‘அபயந்தர குட்டவாளி’யின் மீதி.

நீதிமன்றத்தில் நிராதரவாக நிற்கும் அவருக்குச் சட்டம் என்ன பதிலைத் தந்தது என்று சொல்கிறது ‘அபயந்தர குட்டவாளி’. இந்த டைட்டிலுக்கு ‘குடும்ப வன்முறையில் ஈடுபடும் குற்றவாளி’ என்று அர்த்தமாம்.

குறிப்பிட்ட திசையில் கதை!

ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி, ஹிஸ்டரி, ட்ராமா என்று எடுத்துக்கொண்ட வகைமையை மட்டுமே பிரதிபலிக்கிற காட்சிகளைக் கொண்டதாகச் சில படங்கள் உருவாக்கப்படும்.

அந்த வகையில், பொய் புகார்களால் குடும்ப நீதிமன்றங்களுக்கு இழுத்து வரப்படும் ஆண்களை மட்டுமே மையப்படுத்துகிறது ‘அபயந்தர குட்டவாளி’. அதனால், இப்படத்தில் பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று சிலர் எதிர்க்குரல் எழுப்ப நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவுக்கு, ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்கிறது கதை. அது தொடர்பான அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஆனால், அதனை ரொம்பவே நேர்த்தியாகத் திரையில் கையாண்டிருக்கிறார் சேதுநாத் பத்மகுமார். சிக்கலான, சந்தேகத்திற்குரிய, பிரச்சனைகளை எழுப்புகிற கேள்விகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டிச் சென்றிருக்கிறார். இந்த படத்தின் பலவீனம் அதுவே. ஆனால், படம் பார்க்கையில் அந்த சந்தேகங்கள் நம் மனதைப் பிறாண்டாத வண்ணம் காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

கேரளாவிலுள்ள கிராமப்புற அழகை ஏந்தி வந்திருக்கிறது அஜய் டேவிட் கச்சப்பள்ளியின் ஒளிப்பதிவு. எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்கிற வகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார் சோபின் கே சோமன்.

திரைக்கதையில் வரும் களங்களை ‘உண்மை’ என்று நம்புகிற வகையில் காட்ட உதவியிருக்கிறார் கலை இயக்குனர் சாபு ராம்.

ராகுல் ராஜின் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியையும் அதனதன் தன்மையோடு நம் மனதில் திணிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகள் கலக்குமிடங்களில் அந்த மாற்றத்தை பின்னணி இசை அழகாகக் கையாண்டிருக்கிறது.

இது போக பிஜிபால், ராகுல்ராஜ், முத்து, கிறிஸ்டி ஜாய் ஆகியோர் பாடல்களைத் தந்திருக்கின்றனர்.

இதர தொழில்நுட்ப அம்சங்கள் கதையோட்டத்தில் பெரிதாக இடையூறு விளைவிக்கவில்லை.

இந்தக் கதையில் நாயகனின் தாய், வழக்கறிஞரின் உதவியாளர் ஆகிய இரு பெண்களை மட்டுமே ‘நியாயமானவர்களாக’க் காட்டுகிறார் இயக்குனர்.

நாயகியையோ, அவருக்கு நெருக்கமானவர்களையோ, இதர பெண் பாத்திரங்களையோ விலாவாரியாக ரசிகர்களுக்கு விளக்கிச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்.

அப்படியிருந்தும் பழைய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ ஆனது அப்பாவி ஆண்களுக்கு எதிராகச் சில பெண்களால் பயன்படுத்தப்படுவதாக வாதாடுகிறது நாயக பாத்திரம்.

அதைக் கேட்டதும், ‘என்ன வேலை பார்த்துட்டு இருந்தீங்க, நீங்க லா படிச்சா நல்ல எதிர்காலம் உண்டு’ என்று நீதிபதி பாத்திரம் பாராட்டு பத்திரம் வாசிக்கிறது.

இப்படிச் சில ‘ஹீரோயிச’ மொமண்ட்கள் இந்த படத்தில் உண்டு. அவை ‘யதார்த்தம்’ எனும்படியான திரைக்கதை ட்ரீட்மெண்டை பார்த்து ‘ஹெக்கெக்கே’ என்கிறது.

போலவே, இந்தக் கதையில் நாயகனோடு சேர்த்து மூன்று ஆண் பாத்திரங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட சில பெண்களால் நீதிமன்றத்தில் அவமானமுறுவதாகக் காட்சிகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. மூவரையும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவராக இயக்குனர் காட்டியிருப்பதும் திட்டமிட்ட ஒன்றாகவே தெரிகிறது.

இவ்வளவையும் யோசித்த இயக்குனர் நாயகி தரப்பைக் காட்ட வேண்டாம் என்று விட்டிருப்பாரா? நிச்சயம் அதற்காகச் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இறுதியாக, கதை சொல்லலை இலகுவாக்கும் என்று எண்ணி அவரே அக்காட்சிகளை வெட்டியிருக்கலாம்.  

ஆனால், நமக்கு அதுவே பெருங்குறையாகத் தெரிகிறது.

போலவே, கிளைக்கதைகளில் வருகிற பெண் பாத்திரங்களையும் ஓரிரு ஷாட்களில் ‘பை’ சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அவர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாம்.

இந்த படத்தில் பாலியல் உறவு குறித்த நாயகியின் விருப்பம் அல்லது கருத்து என்னவென்று இயக்குனர் தெளிவாகச் சொல்லாததும் ஒரு குறையே. வெளிப்படையாக அது பற்றி விவாதித்தால் பிரச்சனை வரலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அது சில ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியது என்பதை மறுக்க முடியாது.

‘அபயந்தர குட்டவாளி’யில் வருவது போன்று எந்த ஆணும் பாதிக்கப்படவில்லை என்று எவராலும் உறுதி சொல்ல முடியாது. ஆனால், இது போன்ற திரைக்கதைகள் ‘ஆண்களை பாதிக்கப்பட்டவர்களாகவும் பெண்களை பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களாகவும்’ பொதுவாகச் சித்தரிக்க வழிவகை செய்துவிடும் என்பதே சிலரது கவலை. அதனால், படத்தில் இருக்கும் குறைகள் அவர்களுக்குப் பூதாகரமாகத் தெரியும். அந்த பார்வை நிச்சயம் தவறல்ல.

அதனைத் தாண்டி, எடுத்துக்கொண்ட கதைக்கருவை ஓரளவுக்கு நேர்த்தியாகவே திரையில் கடத்தியிருக்கிறது சேதுநாத் பத்மகுமார் குழு. அது மட்டும் போதும் என்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும். ‘இதெல்லாம் ஏத்துக்க முடியாதுங்க’ என்பவர்கள் இதனைக் கரித்துக் கொட்டுவார்கள்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share