“ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்றவர் ரஜினி – விஜய்க்கு பறந்த பகீர் கடிதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajini

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத ஆதவ் அர்ஜுனா போன்ற நபர்களை உடன் கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும் பாஜக பிரமுகர் அர்ஜூன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக பிரமுகர் அர்ஜூன மூர்த்தி ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் “ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று கூறி அரசியல் நிலையை சுட்டியவர் ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அர்ஜூனமூர்த்தி இன்று (மார்ச் 13) விஜய்க்கு எழுதி உள்ள கடிதத்தில், “தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே. ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை.

தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் அவர்கள் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அது அறிவு, அனுபவம் மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை கட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது; அது காலப்போக்கில் பெரிய அரசியல் சுமையாக (liability) மாறும்.

அதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றால், அவரது செயல்பாடுகள் காரணமாக தொல்.திருமாவளவன் அவர்களின் கட்சி இருந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவு. அந்த அரசியல் சூழ்நிலையே பின்னர் அவரை தங்கள் கட்சியில் சேரும் நிலைக்கு தள்ளியது என்பதை தமிழகம் முழுவதும் அறிந்ததே.

ADVERTISEMENT

குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும் பாசமும் பெற்றிருக்கும் நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது. அது தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுமே புண்படுத்தும்.

ரஜினிகாந்த் அரசியலில் அதிகாரம் பெற்றவர் அல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர்.

அவரது வாழ்க்கையில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன:
ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் “ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று கூறி அரசியல் நிலையை சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்துக்காக அவர் பல விமர்சனங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.
இருந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டிருந்தார்.

இந்தியாவிலும் உலக அரங்கிலும் பல தலைவர்களின் மரியாதையைப் பெற்றவர்.

அவரைப் போன்ற நபரை குறைத்து பேசுவதன் மூலம் யாரும் உயர்வதில்லை. மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் என்பது அரசியலின் அடிப்படை உண்மை.

எனவே, தங்களின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை உடன் கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

இல்லையெனில், தமிழ் மக்களின் மனதில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும். தமிழக அரசியல் உயர வேண்டும் என்றால், பிரிவினை, இகழ்ச்சி மொழி அல்ல தேவை. பொறுப்பான அரசியல் மொழி தான் தேவை ” தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த போது அர்ஜூன மூர்த்தி அவருடன் இணைந்து பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share