சிலிண்டர் தட்டுப்பாடு – தமிழகத்தை வஞ்சிக்கும் NDA அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

dmk

ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்திலும் பொது மக்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. சிலிண்டர் முன் பதிவு செய்வதற்கான காலக் கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் பதிவு செய்ய முயற்சித்தாலும் பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை.. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் 15.03.2026 ஞாயிற்றுக் கிழமை – காலை 10.30 மணிக்கு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ஒன்றிய பாஜக NDA அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும் – வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய NDA அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டனத்திற்குரியது

அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி , நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது. மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

ADVERTISEMENT

இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் NDA அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share