சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் சேர்ப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் சென்னையில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “எங்களுடைய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இருப்பார்கள் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். எப்படி என்பது குறித்து நீங்கள் விரைவில் தெரிந்துகொள்வீர்கள்” என கூறியிருந்தார்.
இதனால் சசிகலா, புதிய கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடக் கூடும் அல்லது சசிகலாவின் சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் சார்பில் தமது ஆதரவாளர்களை வேட்பாளராக நிறுத்தக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று முதல் தமது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு இன்றும் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி சசிகலா ஆதரவாளர்களிடம் நாம் பேசிய போது, “எலக்ஷன் பற்றி சில விஷயங்களை கேட்டாங்க.. ஒரு சிலர் கிட்ட தேர்தலில் நீங்க நிற்கிறீர்களா? எவ்வளவு ஓட்டு வாங்குவோம்னு நினைக்கிறீங்க.. உங்க தொகுதியில அதிமுக- அமமுகவுக்கு எவ்வளவு ஓட்டு இருக்குது?ன்னு பல கேள்விகளை கேட்டாங்க” என்றனர்.
