பிரதமர் மோடியாக இருக்கட்டும், ஸ்டாலினாக இருக்கட்டும், எல்லா கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் நீங்கள் என கோவை வந்த இளையராஜாவுக்கு அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். annamalai praising ilaiyaraaja at coimbatore
கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நேற்று (ஜூன் 7) மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக கடந்த 6ஆம் தேதி கோவை வந்தார்.
அப்போது தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நான் பாட்டாளி!
அப்போது மேடையில் பேசிய அவர், “நான் பேச்சாளர் அல்ல. நான் ஒரு பாட்டாளி. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபட்டு வேலை செய்பவன். ஆனால், இங்கே பாடுபட்டு உழைப்பவர்கள் அதிகம் அவர்களின் பாடு வேறு, எனது பாடு வேறு. எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக இணைவது போல், இங்கு ஒரு நோக்கத்திற்காக அனைவரும் வந்து ஒன்று கூடியுள்ளீர்கள்.
கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு எனது ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது. நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது. என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார்.
இப்போது வரை அது என்னிடம் தான் இருக்கிறது. கோவைக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு எப்போது இருக்கும். கோவையை நான் பிரிவது கிடையாது” என பேசியிருந்தார்.
தொடர்ந்து கோவைப்புதுார் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி மைதானத்தில், நேற்று மாலை இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்ட நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நேரில் பங்கேற்று இளையராஜாவை மேடையில் வரவேற்று பேசினார்.
நமக்கு 17 ஆண்டுகள் தேவை!
அவர், “இசைஞானி மேஸ்ட்ரோ என்னை பொறுத்த வரை இசை கடவுள் ஐயா இளையராஜா அவர்களோடு நாம் இருந்து கொண்டு இருக்கிறோம். அவரைப் பார்ப்பதற்கு நாம் எல்லோரும், எல்லாத்தையும் மறந்து மனிதர்களாக, இசை பிரியர்களாக இங்கே இருக்கிறோம்.
அவர் போட்டு இருக்கின்ற இசையை முதலில் இருந்து கேட்பதற்கு நமக்கு 17 ஆண்டுகள் தேவை. 49 ஆண்டுகள் இசை துறையில் 1,500 படங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் என நமது சந்தோசமான நேரத்தில் துக்கமான நேரத்தில், தூக்கத்தில் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கக் கூடிய இசைஞானி ஐயாவை கோவை மாநகருக்கு எல்லோரும் சார்பாக வரவேற்கிறேன்.
அதை அனைத்தையும் தாண்டி தனி பெருமை, தமிழகத்தினுடைய அடையாளமாக, இந்தியாவினுடைய பெருமையாக, முதல் ஆசியாவைச் சார்ந்த ஒரு மனிதர் லண்டன் வெஸ்டர்ன் கிளாசிக்கல் சிம்பொனி இசையில், பீத்தோவன் மீட் லோஃப் இவர்களெல்லாம் போட்ட இசைக்கு மேலே வேலியன்ட் சிம்பொனி இசையை கொடுத்து விட்டு, நம்முடைய மாநகரத்திற்கு வந்து உள்ளார்கள். இதை எல்லோரும் நாம் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும்.
அதற்கு காரணம் சிம்பொனியின் கிராமர், அர்த்தமேட்டிக் எல்லாமே வெஸ்டர்ன் மக்கள் செய்தது. அதை எல்லாம் உடைத்து ரூல்ஸ் ஆப் இளையராஜா என்பதை லண்டனுக்கு கொண்டு போயிருக்கிறார். தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.
அடுத்த வருடம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறீர்கள். எல்லா விருதுகளும் உங்களைத் தேடி வந்துவிட்டது. எல்லா மனிதர்களும் உங்களிடம் வந்து விட்டனர்.
நான் சார்ந்துள்ள கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடியாக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும், ஸ்டாலினாக இருக்கட்டும், எல்லா கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர். நீங்கள் இங்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி” என அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.