ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பிப்ரவரி 26-ந் தேதி விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் ரூ.3,716 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் ஆடம்பரமான ‘அபோட் – Abode’ பங்களாவையும் அமலாக்கத்துறை நேற்று முடக்கிய நிலையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 40 சொத்துக்களைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சுமார் ரூ.15,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அனில் அம்பானியின் சொத்துக்களை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்- PMLAன் கீழ் இதுவரை முடக்கி வைத்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் குழும நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகள், அத்துடன் யெஸ் வங்கி மூலம் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அனில் அம்பானியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சுமார் 17 தளங்களைக் கொண்ட ‘அபோட்’ பங்களா, மும்பையின் மிக உயரிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இதன் மதிப்பு ரூ.3,716 கோடி என மதிப்பிட்டுள்ளது அமலாக்கத்துறை. இதுவும் முடக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ‘Abode’ பங்களா
- 16,000 சதுர அடி பரப்பளவும் 66 மீட்டர் உயரமும் கொண்ட 17 மாடி கட்டிடம்.
- அனில் அம்பானி தனது தாய் கோகிலா பென் அம்பானி, மனைவி டினா முனிம் அம்பானி மற்றும் மகன்களுடன் வசிக்கும் இல்லம் இது.
- ஹெலிபேட், திறந்தவெளி நீச்சல் குளம், அதிநவீன உடற்பயிற்சிக் கூடம், சொகுசு கார்களுக்கான பிரத்யேக கேரேஜ் மற்றும் ஓர் அழகிய கோவில் என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.
- பளிங்கு சுவர்கள், பிரமாண்டமான கண்ணாடி அலமாரிகள் மற்றும் நேர்த்தியான கலைப்படைப்புகளுடன் கூடியது இதன் உட்புற வடிவமைப்பு.
- கண்கவர் பசுமையான தோட்டத்தையும் கொண்டுள்ளது.
