திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம்; பிப்ரவரி 28-ந் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று பிப்ரவரி 26-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று பாமகவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் எப்படிப் பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகள் எனக் கேட்டு, எல்லாரும் அதன்படி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கான ஒரு கலந்தாய்வுக் கூட்டம் தான் இது.
எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இன்றைக்கே முடிவு செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான களம் சரியாக அமையவில்லை. அதனால நேரம் வரும்போது உங்களுக்குத் தெரியாமலா நடக்கும்?. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அப்போது, “திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா? இருக்காதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “ இருக்கும்.. இருக்கும்..” என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.
மேலும், “ நமக்கான வாகனம் ரெடி ஆயிடுச்சு, நமக்கான வாகனத்துல ஏறதுக்குத் தயாரா இருக்கணும்’னு கட்சி தொண்டர்களுக்கான கடிதத்துல சொல்லிருக்கீங்க. அது என்ன வாகனம்? எல்லாரும் எதிர்பார்ப்போடு இருக்காங்களே” என்ற கேள்விக்கு “ தேர்தல் வாகனம்தான்” என பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.
அத்துடன், “வரும் 28-ந் தேதிக்குள் கூட்டணி பற்றி தெரியுமா?” என்ற கேள்விக்கு, “ஆமாம்.. பிப்ரவரி 28-ந் தேதிக்குள் தெரியும்.. எந்த வாகனத்தில் ஏறப் போகிறோம் என்பது..” என்றார் டாக்டர் ராமதாஸ்.
