‘ஆப்சென்ட்’ எம்.எல்.ஏக்களுக்கு அன்புமணி கூட்டுப் பிரார்த்தனை- கொந்தளித்த சேலம் அருள்!

Published On:

| By Minnambalam Desk

PMK Anbumani

தாம் கூட்டிய மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்காமல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த எம்.எல்.ஏக்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். மேலும் அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவில் தாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதற்கு சேலம் அருள் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். Anbumani Holds Group Prayer for ‘Absent’ MLAs – Salem Arul Expresses Outrage!

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான தலைவர் அன்புமணியின் மோதல் தொடருகிறது. பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தருமபுரி, சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டங்களை நேற்று ஜூன் 19-ந் தேதி அன்புமணி நடத்தினார். ஆனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாமக எம்.எல்.ஏக்கள் ஜிகே மணி, சேலம் அருள் ஆகியோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சேலம், தருமபுரி மாவட்டங்களின் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, நமது கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்; உடல் ரீதியாக, மன ரீதியாக குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தார்.

அத்துடன் அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவில் சேலம் அருள் எம்.எல்.ஏ. கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்கள் ஜிகே மணி, சேலம் அருள் ஆகிய எம்.எல்.ஏக்களை மிகக் கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் கொந்தளித்துப் போன சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், டேய் பாவிகளா 35 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்து .18 முறை சிறை கண்டேன். 135 நாட்கள் நானும் ரத்தினமும் சிறையில் இருந்தபோது, மும்பைக்கும், டெல்லிக்கும் ஓடியவர்கள் இன்று மேடையில் வீர வசனம் பேசியதை பார்த்து பலர் ஏளனமாக சிரித்ததை கண்டோம். அச்சிறுப்பாக்கம் இடைத்தேர்தலில் அண்ணன் அன்புமணியோடு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது பிறந்த எனது மகள் டாக்டர் எழிலை 28 நாட்களுக்கு பிறகே முதன்முதலில் பார்த்தேன்,

அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள் அவர் அரசியலில் கால் பதித்த நாள் முதல் உடனிருப்பவன். தமிழ்நாடு முழுவதும் அண்ணன் அன்புமணி சென்ற குக் கிராமங்கள் அனைத்திற்கும் நானும் மறைந்த என் உயிர் நண்பன் அறிவுச்செல்வனும் அவரோடு தமிழகம் முழுவதும் சென்ற வரலாறு உனக்கு தெரியுமா, உனக்குத் தெரியாவிட்டால் அண்ணனை கேட்டுக் கொள் … சாதியை,அய்யாவை கொச்சைப்படுத்திய கயவர்களை மெயின் ரோட்டில் துரத்தி துரத்தி விரட்டியவன். என்னையும், என் உழைப்பை,என் தியாகத்தையும், தாண்டி இந்த இயக்கத்திற்காக உங்களை அர்ப்பணித்த நாடகப் முகநூல் போராளிகளே ஆதாரத்துடன் வா நேரில் நேரலையில் விவாதிப்போம் என்னை பொறுத்தவரை மருத்துவர் அய்யாவும் மருத்துவர் சின்னய்யாவும் ஒன்று தான்.
உங்கள் சுய லாபத்திற்காக இருவரையும் பிரிக்காதீர் என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share