2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவின் தொடர் நடவடிக்கைகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான நெருக்கடியை தரும் வகையில் இருக்கின்றன. Amit Shah Edappadi Palaniswami
சென்னையில் ஏப்ரல் 11-ந் தேதி அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது பேசிய அமித்ஷா, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. நாங்கள் இணைந்துதான் இங்கே ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் எங்கள் கூட்டணி” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ந் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் கூட்டணி மட்டுமே. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார்” என தெரிவித்தார்.
இதனையடுத்து அதிமுக- பாஜக தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவிக்க சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த பிரச்சனை சற்று அமைதியானது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 8-ந் தேதி மதுரையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என மீண்டும் கூறினார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது என அழுத்தம் திருத்தமாக கூறிய நிலையில், அவரது கருத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா மதுரையில் உரத்துச் சொல்லிவிட்டுப் போனார்.

ஆனால், இந்த முறை எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் அனைவரும் கனத்த அமைதி காத்தனர். அமித்ஷாவின் பேச்சை அப்படியே கடந்து சென்றுவிட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல் அதிமுகவின் அடுத்த நிலை தலைவர்கள் வரை அமித்ஷா பேச்சு பற்றி மூச்சே விடவில்லை.
இதனைத் தொடர்ந்து ஜூன் 22-ந் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையாகி அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள்தான் முதலில் பதிலளித்தனர். இதன் பின்னரே இறுதியாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
தற்போது தினத்தந்தி, தினமலர் நாளிதழ்களில் ஒரே நாளில் இன்று ஜூன் 27-ந் தேதி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சிறப்பு பேட்டிகள் வெளியாகி உள்ளன.
இந்த பேட்டிகளில், “தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். இதில் பாஜக பங்கு இருக்கும்” என மீண்டும் அழுத்தி கூறியிருக்கிறார் அமித்ஷா.
அத்துடன், “அதிமுக தலைமையில் பாஜக தேர்தலை சந்திக்கும். அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வர் வேட்பாளர்” என்றும் சொன்ன அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்துள்ளதுதான் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
வழக்கம் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமித்ஷா பேட்டிக்கு பதிலளித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறுகையில், “கூட்டணி என்பது வேறு, கட்சிகளின் கொள்கை என்பது வேறு. தமிழகத்தில் கூட்டணி அரசு அமைந்ததாக இதுவரை சரித்திரமே இல்லை. அப்படி ஒரு கூட்டணி அரசை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது. அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
“எடப்பாடி பழனிசாமி தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர். இது தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு. கூட்டணி பற்றிய கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்” என்கிறார் மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக மேலும் பலவீனமடையும் என்பதை தெரிந்தே, ‘நெருக்கடிகளுக்காக’ கூட்டணி வைத்தார் எடப்பாடி பழனிசாமி என்கிற விமர்சனம் ஏற்கனவே உள்ளது.
பின்னர், அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா கூறிய போது அதை ஆணித்தரமாக எதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் முன்னர் எழுந்த விமர்சனம் சமன் செய்யப்பட்டதாக தோற்றம் பெற்றது.
ஆனால், மதுரையில் அமித்ஷா பேசியதற்கு பின்னரான பெரும் மவுனம், மதுரையில் முருகன் மாநாட்டு சர்ச்சைக்கு தாமதமான அறிக்கை ஆகியவை எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையின் மீது வீசப்பட்ட சிறு கற்களாகப் பார்க்கப்பட்டன.

தற்போது அமித்ஷா, அதிமுக பெயரை மட்டும் சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற அதிமுகவின் பொதுச்செயலாளர் பெயரை திட்டமிட்டே தவிர்த்திருப்பதும், மீண்டும் கூட்டணி ஆட்சி என அழுத்திச் சொல்வதும் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை மீது வீசப்பட்டிருக்கும் பெருங்கற்கள்.
பாஜக வீசும் இத்தனை கல்லடிகளையும் எடப்பாடி பழனிசாமி தாங்கிக் கொண்டு கூட்டணியில் நீடிப்பார் எனில் அவரது ஆளுமை ‘கேலி’ பொருளாகிவிடும்.
இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக ‘சுயமரியாதை’யுடன் வசனங்களைப் பேசத் தொடங்கினால் அதிமுக என்ற கட்சியையே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கபளீகரம் செய்து அவரை தனிமைப்படுத்திவிடும் பாஜக.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவை கைப்பற்ற, தமிழ்நாட்டிலும் ஏக்நாத் ஷிண்டேக்களை களமிறக்க பாஜக தயாராகிவிட்டதோ என்ற சந்தேகங்களையும் இந்த ‘சீண்டல்கள்’ வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் பாஜகவின் இலக்கு என்பதாக இந்த போக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவை, பாஜகவின் கட்டளையை ஏற்கிற கட்சியாக உருமாற்றுவது, அப்படி நடக்காமல் போனால் – எதிர்ப்புகள் எழுந்தால் அந்த கட்சியையே சிதைத்துவிடுவது என்பதுதான் பாஜகவின் உண்மையான முதன்மையான இலக்கு என்பதாகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.