கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை (பிப்ரவரி 26) நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 25) கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அமித்ஷாவுக்கு, ‘தமிழ் வாழ்க’ என்ற எழுத்துக்களுடன் கூடிய மாலையை அண்ணாமலை அணிவித்து வரவேற்றார். தமிழ் எழுத்துக்களும் பாரதியார் முகமும் பொறிக்கப்பட்ட சால்வையை எல்,.முருகன் அணிவித்தார். திருக்குறள், தமிழ் கலாச்சாரத்தை சித்தரிக்கும் புகழ்பெற்ற திருப்புடைமருதூர் ஓவியங்கள் அடங்கிய புத்தகம் அமித்ஷாவுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு முழுக்க முழுக்க தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையிலான பரிசுகளை பாஜகவினர் வழங்கியுள்ளனர்.

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை அமித்ஷா நாளை காலை திறந்து வைக்கிறார். மேலும், கோவையில் இருந்தபடியே ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவை பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்கிறார்.
பின்னர் மாலை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக அமித்ஷா பங்கேற்கிறார். மறுநாள் காலை கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமித்ஷா வருகையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கோவை காந்தி பார்க்கில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Amit Shah reached Coimbatore