மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியில் செவ்வாயன்று இளைஞர் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கான தயாரிப்புகளின் போது, மாணவிகள் ஒரு அறையில் உடை மாற்றினர்.
அப்போது, மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக ஏபிவிபி தலைவர்கள் ரகசியமாக படம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கல்லூரி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவிகள் உடை மாற்றும் அறையில் படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்த கல்லூரி முதல்வர் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணைத் தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.