இளம் வயதிலேயே அம்மா பாத்திரங்கள்.. அசத்தும் லிஸி ஆண்டனி..!
லிஸி ஆண்டனி. இன்றைய தேதியில் அம்மா, அத்தை, பாட்டி பாத்திரங்களுக்கான தேடலில் இறங்குகிற படக்குழுக்களின் முதல் ‘சாய்ஸ்’ ஆக இருப்பவர். சாதாரண பெண்களின் மன உறுதியையும் போர்க்குணத்தையும் சரியான வகையில் திரையில் பிரதிபலித்து வருபவர். A strong woman face in kollywood – lizzie antony
அனைத்துக்கும் மேலே, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுக்கென்று நேரெதிரான பாத்திரங்களை அடுத்தடுத்து ஏற்று நடிக்கவல்ல திறமை கொண்டவர். இப்படி நடித்தால்தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தன் மீது ஏற்றப்படுகிற சுமைகளைச் சுக்குநூறாக்குகிற வித்தை தெரிந்தவர். இது போன்ற விஷயங்களே ஒரு கலைஞரை நெடுங்காலம் கலைத்துறையில் பயணிக்க வைக்கும்.
’தூங்கா நகரம்’ தொடங்கி ‘நிறம் மாறும் உலகில்’ வரை ஒவ்வொரு படமும் இவரது தனித்துவம் சொல்லும்..!

கடலில் இருந்து திரைக்கு…
லிஸி ஆண்டனியின் இயற்பெயர் எலிசபெத் சங்கீத் வாரியர். இவரது பெற்றோரின் பூர்விகம் கேரளா. ஆனாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே வடசென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையில் தான். இவர் பிறந்த தேதி ஆகஸ்ட் 12, 1980.
தந்தை விமானப்படையில் இருந்தவர். பின்னர் ஷிப்பிங்கில் பணியாற்றியிருக்கிறார். அதனால், இளம் வயதிலேயே கப்பல் மாலுமி ஆக வேண்டும் என்கிற ஆசை லிஸிக்கு இருந்திருக்கிறது.
ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படிப்பு, பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வணிகவியல் முதுகலைப் பட்டம் என்று இவரது கல்விப் பின்புலம் சிறப்பாக இருந்திருக்கிறது.
அந்த காலகட்டத்தில், ஷிப்பிங் துறையிலேயே தனது பணி அமைய வேண்டும் என்று உறுதி காட்டியிருக்கிறார் லிஸி. அதன் விளைவாக வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா என்று உலகை வலம் வந்திருக்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றையும் கடந்திருக்கிறார்.
ஷிப்பிங்கில் பிஸியாக இயங்கிய காலகட்டத்தில், திரைப்படங்களில் நடிக்கிற வாய்ப்புகள் லிஸி ஆண்டனியைத் தேடி வந்திருக்கின்றன. அதன் காரணமாக தூங்கா நகரம், நாங்க படங்களில் சிறு பாத்திரங்களில் அவ்வாறு நடித்திருக்கிறார்.
இதற்கு விதையாக அமைந்தது இவரது சிறு வயது கலையனுபவங்கள். திரைப்படம் பார்க்கவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தடை இடுகிற குடும்பப் பின்னணி இவருடையது. அதேநேரத்தில், இவரது குடும்பத்தினர், உறவினர்களில் பலருக்கு இசைக்கருவிகள் வாசிக்கிற ஆர்வம் உண்டு.
அதன் நீட்சியாக, சிறுவயதில் பரத நாட்டியம் கற்றிருக்கிறார் லிஸி. அதன் தாக்கம், நடிப்பின் பக்கம் இவரது கவனத்தைத் திருப்பியபோது தென்பட்டிருக்கிறது.

ராம் தொடங்கி வைத்த பயணம்!
இயக்குனர் ராமின் ‘தங்க மீன்கள்’ படத்தில் ஸ்டெல்லா மிஸ் என்ற பாத்திரத்தில் நடித்தது லிஸியின் திரைப் பயணத்தில் முதல் திருப்புமுனை. அந்த வெற்றி தொடர்ந்து திரையுலகில் அவரை நீடிக்கச் செய்து வருகிறது.
அதற்கடுத்த சில ஆண்டுகள் இவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஏற்கனவே நடித்திருந்த கருப்பம்பட்டி, பாம்புசட்டை, குக்கூ படங்கள் தாமதமாக வெளியாகின.
2017இல் வெளியான ‘தரமணி’யின் வாயிலாக மீண்டும் லிஸீ மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சினார் ராம். சாதாரண, நடுத்தரக் குடும்பத்து பெண்களின் மன உளைச்சல்களைக் காட்டுவதாக அப்பாத்திரம் சிலாகிக்கப்பட்டது.
அதன்பிறகு ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரிப் பேராசிரியாராக நடித்தார் லிஸி. ‘பேரன்பு’ படத்தில் இடம்பிடித்தார். ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நாயகன் ஹரிஷ் கல்யாணின் தாயாகத் தோன்றினார்.

தான் நடிக்கிற பாத்திரங்களின் வயதையோ, திரையில் தோன்றுகிற கால அளவையோ, லிஸி ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. குறுகிய நேரத்தில் திரையில் வந்து போனாலும் ஏதேனும் மாயாஜாலம் செய்து ரசிகர்களை வசீகரித்துவிட வேண்டுமென்பதுவே இவரது எண்ணம். இன்று வரை அதனை உறுதியாகப் பின்பற்றி வருகிறார்.
’மேதகு’ படத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே, ‘ரைட்டர்’ படத்தில் நாயகன் சமுத்திரக்கனியின் முதல் மனைவி, ’சாணி காயிதம்’ படத்தில் வழக்கறிஞர், ‘கட்டா குஸ்தி’ படத்தில் நாயகன் விஷ்ணு விஷாலின் உறவினர் என்று விதவிதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அனுபவம் இவருக்குண்டு. இவற்றில் பல சக கலைஞர்கள் ஏற்கத் தயங்குகிற வகையில் வார்க்கப்பட்டவை.
என்னதான் மெனக்கெட்டு சில விஷயங்களை கைக்கொண்டாலும், அவற்றை ரசிகர்கள் கவனிக்கிறார்களா என்றறிவதில் நடிப்பு கலைஞர்களுக்கு ஆர்வம் அதிகம். அப்படிப் பலமுறை ஏமாற்றத்தைச் சந்தித்த லிஸிக்கு ரசிகர்களின் பேராபிமானம் குவியக் காரணமானது ‘ப்ளூ ஸ்டார்’.
பா.ரஞ்சித் தயாரிப்பில், ஜெயக்குமார் இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனின் தாயாகத் தோன்றி காமெடி, செண்டிமெண்ட் கலந்த நடிப்பைத் தந்திருந்தார்.

விரைவில் கதாநாயகியாக….
நடிக்க வந்த புதிதில் ‘சிறந்த குணசித்திர நடிகையாக அறியப்பட வேண்டும்’ என்பதே லிஸியின் ஒரே கனவு. அதனை எட்டியபிறகு, ஆசியா முழுக்கத் தான் அறியப்பட வேண்டும் என்பது இவரது எண்ணமாக இருக்கிறது.
இப்படித் தனக்கான எல்லைகளை அதிகரித்துக் கொண்டே செல்கிற மனப்பாங்குதான் லிஸியின் பலம்.
அதனாலேயே குறும்படங்கள், விளம்பரப் படங்கள் என்று வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கும் இவர் சுமார் அரை டஜன் வெப்சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். அதன் வழியே அடுத்த தலைமுறையினரிடம் ‘அம்மா நடிகை’யாகப் புகழ் பெற்றிருக்கிறார்.
விரைவில் லிஸி கதை நாயகியாக நடித்திருக்கிற ‘குயிலி’ திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றின் மீதிருக்கும் நம்பிக்கையால் இன்று தனக்கான இடத்தைத் திரையுலகில் கண்டடைந்திருக்கிறார் லிஸி.
எதிர்காலத்தில் எழுத்தாளராக, இயக்குனராக அடையாளம் காணப்பட வேண்டும் என்பது இவரது விருப்பங்களில் சில. அதற்கான படிக்கட்டுகளாகவே இவரது பாத்திரத் தேர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது.
லிஸி ஆண்டனியின் உழைப்புக்கேற்ற உயர்வினைத் தருகிற காலம் விரைவில் கனியட்டும்..!