சுடுகாட்டில் இருந்து இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் வந்து தொண்டாமுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், ஒவ்வொரு வித்தியாசமான முறையில் சென்று வேட்புமனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். குதிரையில் வந்து ராஜாவாக, ஏர் கலப்பையுடன் விவசாயியாக, சவப்பெட்டியுடன் வந்தது உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல்கள் என இதுவரை 48 முறை போடியிட்டுள்ளார். கடந்த 1997 ல் நடந்த கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார். பின்னர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக்கூடது என்பதை வலியுறுத்தும் வகையில், தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதுவரை வேட்புமனு தாக்கலுக்காகவே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒட்டுக்கு பணம் வாங்கினால் இறுதிச்சடங்குதான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தேர்தலில் 49 ஆவது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுடுகாட்டில் இருந்து மண்பானையுடன் வந்தவர், 100 மீட்டருக்கு முன்பு உடைத்து ,பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை தெற்கு கோட்டாட்சியருமான மாருதி பிரியாவிடம்,தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
எல்லோருக்கும் இறுதிச்சடங்கு சுடுகாட்டில் தான் நடக்கும், ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், இறுதிச் சடங்கு வீட்டிலேயே நடக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே பானையுடன் வந்ததாக நூர் முகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுத்தாலே இந்தியா வல்லரசாக மாறும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசஙகள் வேண்டாம். வருகின்ற தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
