பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வரும் டிப்ளமோ மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் கிளவுட் கம்ப்யூட்டிங் உட்பட 14 புதிய, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளில் “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இளைஞர்களின் கல்வி, அறிவு, சிந்தனை, ஆற்றல் மற்றும் திறமைகளை மேம்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, போட்டித்தேர்வு பயிற்சி, உயர்கல்விக்கு வழிகாட்டுதல், வெளிநாட்டு மொழி கற்பித்தல், மாணவர் மேம்பாட்டு பயிற்சி, அறிவியல் களப்பயணம், வெற்றி நிச்சயம் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் டிப்ளமோ மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் கிளவுட் கம்ப்யூட்டிங் உட்பட 14 புதிய, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) அறிவித்துள்ளது.
அதன்படி இந்த சிறப்புப் பயிற்சி திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் அடிப்படையிலான படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
🔷கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
🔷தகவல் பிணைய கேபிளிங் (Information Network Cabling)
🔷இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் (Internet of Things and its Applications)
🔷கட்டுமானச் செலவு மதிப்பீடு (Construction Cost Estimation)
🔷ட்ரோன் சர்வேயிங் (Drone Surveying)
🔷அடிட்டிவ் உற்பத்தி (Additive Manufacturing)
🔷ITI தொழில்துறை 4.0 ஆய்வகங்கள் (ITI Industry 4.0 Labs)
🔷தொழில்துறை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Industrial Design Technology)
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், ”இந்தச் சிறப்புப் படிப்புகள் பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட கட்டாய துணைப் படிப்புகளாக கருதப்படும். இதில் மாணவர்கள் தகுதி பெறுவது அவசியம். இந்தப் பாடங்களில் அவர்களின் சிறப்பான செயல்பாடுகள் மதிப்பெண் பட்டியலிலும் சேர்க்கப்படும்” என்றார்.
மேலும் “இத்திட்டம் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, கல்லூரி முதல்வர்கள் இத்திட்டத்தை அதன் நோக்கத்திற்கேற்ப திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.