உலகம் முழுவதும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட உலக நாடுகளில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 11th International Yoga Day: Modi Participates in Visakhapatnam!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பொது யோகா நெறிமுறை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
‘யோகா சங்கமம்’ முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச யோகாதின நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 6:30 மணி முதல் 7:45 மணி வரை மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த யோகா நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் அம்மாநில அரசால் வழங்கப்படும்.