சென்னையில் இந்த வார இறுதியில் சென்னையிருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் வருகிற 21-ஆம் தேதி மகாளய அமாவாசை ஆகும். இதையொட்டி வருகிற 20-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் மறுநாள் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 2 நாட்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள்கும் இயக்கப்படுகின்றன.
அதன்படி இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (செப்டம்பர் 19) 355 சிறப்பு பேருந்துகளும், வருகிற 20-ஆம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 சிறப்பு பஸ்களும், வருகிற 20-ஆம் தேதி 55 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருகிற 21-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன என அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.