வழக்கமாக ஒரு ஐடி நிறுவனத்திலோ அல்லது ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலோ வேலையை விட்டு நின்றால் அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டால், அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டோம். நிறுவனங்களும், “போனவன் போனவன்தான்” என்று கதவைச் சாத்திவிடும்.
ஆனால், இந்த எழுதப்படாத விதியை உடைத்தெறிந்துள்ளார் ஜோமாட்டோ (Zomato) நிறுவனர் தீபிந்தர் கோயல் (Deepinder Goyal).
“நீங்கள் வேலையை விட்டுப் போயிருக்கலாம்… அல்லது நானே உங்களை வேலையை விட்டுத் தூக்கியிருக்கலாம். ஆனால், இப்போது நாங்கள் மாறிவிட்டோம். மீண்டும் வீட்டுக்கு வாருங்கள்,” என்று அவர் விடுத்திருக்கும் உருக்கமான அழைப்பு (Open Call) இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது என்ன ‘Eternal’? கூகுள் நிறுவனத்திற்கு எப்படி ‘ஆல்பபெட்’ (Alphabet) என்ற தாய் நிறுவனம் இருக்கிறதோ, அதேபோல ஜோமாட்டோ இப்போது “எடர்னல்” (Eternal) என்ற பெரிய குடையின் கீழ் செயல்படுகிறது. இதில் ஜோமாட்டோ (Zomato), பிளிங்கிட் (Blinkit), ஹைப்பர்பியூர் (Hyperpure) மற்றும் டிஸ்ட்ரிக்ட் (District) எனப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த எடர்னல் நிறுவனத்தைக் கட்டமைக்க, அவருக்குப் பழைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
வைரலாகும் அந்தப் பதிவு: தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
- “முன்பு நீங்கள் ஜோமாட்டோவில் வேலை செய்தபோது, அங்கிருந்த சூழலோ அல்லது தலைமையோ (Leadership) உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அது நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த நேரம்; கொஞ்சம் குழப்பமாக (Chaotic) இருந்திருக்கலாம்.
- ஆனால், இப்போது நாங்கள் மாறிவிட்டோம். எடர்னல் நிறுவனம் இப்போது மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் (Organized) செயல்படுகிறது.
- எனக்குப் பழைய முகங்கள் வேண்டும். எங்களைப் பற்றி நன்கு புரிந்த, ஆனால் இடையில் பிரிந்து சென்ற நீங்கள்தான் இந்த எடர்னல் பயணத்திற்குச் சரியான தேர்வாக இருப்பீர்கள்.”
பதவி முக்கியமல்ல: “நான் இப்போது சிஇஓ (CEO) பதவியில் இல்லை என்பதால் நிறுவனம் மாறிவிடும் என்று நினைக்காதீர்கள். பதவிகள் ஒருபோதும் இங்கே முக்கியமில்லை. நான் இங்கேயேதான் இருக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூமராங் (Boomerang) ஊழியர்கள்: கார்ப்பரேட் உலகில் இதை ‘பூமராங் ஹயரிங்‘ (Boomerang Hiring) என்று சொல்வார்கள். அதாவது, வேலையை விட்டுச் சென்றவர்களையே மீண்டும் பணிக்கு அமர்த்துவது.
- புதியவரை எடுத்துப் பயிற்சி கொடுப்பதை விட, பழையவரை எடுப்பது நிறுவனத்திற்கு லாபம்.
- ஊழியர்களுக்கும் இது ஒரு ஜாக்பாட். ஏனெனில், முன்பு இருந்ததை விட அதிக சம்பளம், சிறந்த பதவி (Role) மற்றும் பழகிய சூழல் கிடைக்கும்.
முடிவு: “ஈகோ பார்க்காமல், பழைய பகையை மறந்து மீண்டும் வாருங்கள்,” என்று ஒரு பில்லியனர் சிஇஓ அழைப்பது சாதாரண விஷயல்ல. ஜோமாட்டோவின் இந்த ‘பாசவலை’யில் எத்தனை பழைய பறவைகள் சிக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
