உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
34 வயதே ஆன இளம் முற்போக்கு சிந்தனையாளரான இவர், நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர், இளம் வயது மேயர், மற்றும் முதல் தெற்காசிய வம்சாவளி மேயர் என்ற பெருமைகளை ஒரே நேரத்தில் தட்டிச் சென்றுள்ளார்.
நவம்பர் 4, 2025 அன்று நடைபெற்ற இந்த தேர்தல், அமெரிக்க அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சோஹ்ரான் மம்தானி, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து அசத்தினார்.
இந்த வெற்றி வெறும் ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல, அது நியூயார்க் நகர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு “அரசியல் வம்சத்தை” அகற்றிய ஒரு புரட்சி என்று தனது வெற்றிப் பேருரையில் மம்தானி முழங்கினார். “இன்று இரவு, நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைத்துள்ளோம்” என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் Tryst with Destiny உரையை மேற்கோள் காட்டி அவர் பேசியது பெரும் கைதட்டலைப் பெற்றது.
அவரது வெற்றிப் பேச்சின் முடிவில், பாலிவுட்டின் பிரபலமான “தூம் மச்சாலே” பாடல் ஒலிக்க, உற்சாக வெள்ளத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
