தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, இன்று பிப்ரவரி 22-ந் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ’மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 21-ந் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய ஆறு தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இன்று திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 23 முதல் 26 வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா, அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
