கூமாபட்டி கிராமத்தின் இன்றைய நிலை குறித்து விருதுநகர் ஆட்சியராக பணிபுரிந்த ஜெயசீலன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். world famous Koomapatti
தற்போது தமிழகத்தின் ட்ரெண்டிங் டாப்பிக் கூமாபட்டிதான். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அந்த கிராமத்தின் நீர் நிலைகள், வயல் வெளிகளை வீடியோ எடுத்து போட்டதை தொடர்ந்து ட்ரெண்டானது.
இதையடுத்து பலரும் கூமாபட்டி எங்கிருக்கிறது என தேடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது போல, தற்போது கூமாபட்டி நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை.
இந்தநிலையில் விருதுநகர் ஆட்சியராக இருந்த ஜெயசீலன் கூமாபட்டிக்கு சென்று புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து…
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..

கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் ‘ரீல்’ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் நீர்நிலைகள் நீரின்றி இருப்பதை காண முடிகிறது.
கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். அது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர் ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. world famous Koomapatti